ஆந்திராவின் ஒரே தலைநகர் அமராவதி: ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஆந்திராவின் ஒரே தலைநகர் அமராவதி: ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஆந்திர மாநிலத்துக்கு ஒரே தலைநகர் அமராவதி மட்டுமே என ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஆந்திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, புதிதாக தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரமாக விளங்கிய ஐதராபாத், இருமாநிலங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகரமாக விளங்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், 6 மாதங்கள் கூட ஆந்திராவின் தலைநகரமாக ஐதராபாத் விளங்கவில்லை.

இதையொட்டி ஆந்திராவுக்கு அமராவதியை புதிய தலைநகராக உருவாக்குவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடு, அதற்காக விவசாயிகளிடம் இருந்து 34,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடியை அழைத்து வந்து, அமராவதி தலைநகருக்கான அடிக்கல் நாட்டினார். ஆனால், கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று, முதல்வராக ஜெகன்மோகன் பதவி ஏற்றதும் 3 இடங்களைத் தலைநகராக அறிவித்தார். ராயலசீமாவில் கர்னூலில் உயர் நீதிமன்ற தலைநகராகவும், அமராவதியைச் சட்டசபை தலைநகராகவும், விசாக பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும் அறிவித்தார்.

ஆந்திர விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 700 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 'நாங்கள் அமராவதி தலைநகருக்காகத்தான் நிலத்தை வழங்கினோம். ஆனால், அரசு தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல், 3 தலைநகர் என்று அறிவித்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,' என்று மனுவில் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், 'அமராவதியைத் தலைநகரமாக உருவாக்க வேண்டும் எனவும் இதற்காக, ஏ.பி.சி.ஆர்.டி.ஏ. என்னும் வழிகாட்டுதல் ஆணையம் அமைக்கப்படுகிறது,' எனவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆந்திர அரசு மேல்முறையீடு செய்தது. இதை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து, உத்தரவுகள் பிறப்பித்தது. அதன்படி 'ஆந்திராவுக்கு ஏ.பி.சி.ஆர்.டி.ஏ. வடிவமைத்தபடி அமராவதியை மட்டுமே தலைநகராக உருவாக்க வேண்டும். நிலம் அளித்த விவசாயிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று ஆந்திர அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com