ரஷ்யாவுக்கும் உகரைனுக்கும் இடையில் நடக்கும் போர் எதிரொலியாக இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னையின் பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்ததாவது;
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.40,440க்கு விற்கப் படுகிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் காரணமாக பங்குசந்தைகளும் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று கடும் சரிவை கண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதேபோல சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.80 காசு உயர்ந்து, ரூ.75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க கூடும் என கருதப்படுகிறது.
இப்போரின் எதிரொலியாக பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததிலிருந்து தங்கம் விலை இதுவரை சவரனுக்கு ரூ.2,688 வரை அதிகரித்துள்ளது.
போர் தொடங்குவதற்கு முன் ரூ.37,752 ஆக இருந்த ஒரு சவரன் விலை இன்று ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது.
-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இப்படி நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.