நடிகர் விஜயின் தந்தையும் தமிழ் சினிமா இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னை தி.நகர் நடைமேடையில் படுத்து உறங்கும் காட்சியும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், 'யார் இந்த எஸ்.ஏ.சி' என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். தன் வாழ்க்கை வரலாற்றை வீடியோ வடிவில் வெளியிட தீர்மானித்து, அதற்கான ப்ரோமோ ஒன்றை தன் யூடியூப் சேனலில் ரிலீஸ் செய்திருந்தார். இந்நிலையில், தனது முதல் வீடியோவை 'பிளாட்பார்மில் எஸ்ஏசி' என்ற தலைப்பில் தற்போது ரிலீஸ் செய்துள்ளார். இதை நடிகர் சமுத்திரகனி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் உள்ள காட்சியானது: இயக்குனர் எஸ்.ஏ.சி பளபள சிவப்பு நிறக் காரில் திநகர் பாண்டிபஜார் நாயுடுஹால் முன் வந்திறங்குகிறார். பின்னர் கார் டிக்கியில் இருந்து ஒரு பாய் தலையணையை எடுத்து வந்து, நாயுடுஹால் வாசலில் பாயை விரித்து அமர்ந்து பேச ஆரம்பிக்கிறார். அதில் அவர் தன்னுடைய 60 ஆண்டுகால வாழ்க்கை பயணம் குறித்து பேசுகிறார். அதன் பின்னர் எஸ்.ஏ.சி பேசியதாவது;
சென்னைக்கு நான் சினிமா கனவுடன் வந்தபோது, இப்போது நான் அமர்ந்திருக்கும் இந்த இடத்திலிருந்து தான் என்னுடைய வாழ்க்கையை தொடங்கினேன். இதே இடத்தில் 47 நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் சினிமாவில் வெற்றி பெற்றபோதும் இந்த வழியாக செல்லும்போதெல்லாம் இந்த இடத்தை வாஞ்சையுடன் பார்க்கத் தவறுவதில்லை. வெற்றி போதை வரும்போது நம்மை நாமே எச்சரித்து பழைய நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.அதனால் இப்போதும் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த இடத்துக்கு வந்து பிளாட்பார்மில் படுத்து உறங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இரவு 11 மணிக்கு மேல் இங்கு வந்து உறங்கி, அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டிற்கு சென்றுவிடுவேன்.
-இவ்வாறு அந்த வீடியோவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.