உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கடுவதுடன் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் இந்தியாவிற்கு உலக சந்தை விலையை விட 25 முதல் 27% வரை குறைவான விலையில் கச்சா எண்ணெய் தர முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளால் ரஷ்ய பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளது. மேலும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களையும் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்நிலையை சமாளிக்க தங்கள் உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகளுக்கு விற்க ரஷ்யா முனைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் ரஷ்ய அரசு எண்ணெய் நிறுவனம் இந்திய நிறுவனங்களுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் சர்வதேச நிதி கட்டமைப்பிலிருந்து ரஷ்யா துண்டிக்கப்பட்டுள்ளதால் பணம் செலுத்தும் முறையில் சிக்கல்கள் இருப்பதாகவும் அதற்கான தீர்வுக்கு மாற்று வழிகள் குறித்தும் இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.