தென் ஆப்பிரிக்கா அதிபரான நெல்சன் மண்டேலா, நிறவெறிக்கு எதிராகப் போராடியவர். அதிபராக தேர்வாகுமுன்னர் அவர் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார். அதன்பின்னர் நிண்ட போராட்டங்களுக்குப் பின்னர் விடுதலையாகி, 1994-ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.
பின், 1999-ம் ஆண்டு பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். இந்நிலையில், நெல்சன் மண்டேலா 2013-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவருடைய வீட்டில் காலமானார். அப்போது அவருக்கு வயது 95.
இதையடுத்து, நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தினர், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தென் ஆப்பிரிக்காவின் குனுவில் ஒரு நினைவுத் தோட்டம் அமைக்க உள்ளனர். இதற்காக, நெல்சன் மண்டேலா பயன்படுத்திய சுமார் 100 பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளனர். மீதமுள்ள பொருட்கள் நினைவிடத்தில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
இதுகுறித்து, நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் குர்ன்ஸி ஏல நிறுவனத்தின் தலைவர் அர்லான் எட்டிங்கர் கூறியதாவது:
மண்டேலா அணிந்திருந்த வண்ணமயமான மடிபா சட்டைகள் மற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது.
பிரிட்டன் ராணி எலிசபெத், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தபோது மண்டேலா அணிந்திருந்த மடிபா சட்டைகள், அனைத்து நாட்டுத் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்கள், மண்டேலா அணிந்த பேன்ட், கண்ணாடிகள், பயன்படுத்திய பிரீஃப் கேஸ்கள் என சுமார் 100 பொருட்கள் டிசம்பர் 11-ம் தேதி நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் ஏலம் விடப்படுகிறது.
–இவ்வாறு அவர் தெரிவித்தார்.