கேரளாவில் 10 வயது சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி கோரி அச்சிறுமியின் தாய் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
கேரளாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி தன் சொந்த தந்தையால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமானதால், அந்த கருவைக் கலைக்க அனுமதி கோரி அவரது தாயார் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்தச் சிறுமியை மருத்துவக் குழு பரிசோதித்ததில், அவர் 30 வாரங்கள் 6 நாட்கள் வளர்ந்த கருவை சுமந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. ஆனால் அச்சிறுமிக்கு வெறும் 10 வயதே ஆனதால், பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து மனவருத்தத்துடன் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணன் உத்தரவிட்டதாவது;
இந்த 10 வயது சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரின் தந்தையே காரணம் என்பதை நினைத்து இந்தச் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டும். மேலும் இக்குழந்தையை அச்சிறுமி குழந்தயை பெற்றெடுப்பதா வேண்டாமா என்பது குறித்த மருத்துவ அறிக்கையை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை குழந்தை உயிருடன் பிறந்தால் அதனைப் பேணி பாதுகாத்து வளரச் செய்யும் பொறுப்பை, அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையே ஏற்க வேண்டும். மேலும் இச்சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான அவரின் தந்தைக்கு நீதித்துறை உரிய தண்டனை வழங்கும்.
-இவ்வாறு கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணன் உத்தரவிட்டார்.