மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆண்டிப்பட்டி அருகே வண்டியூர் மலைப்பகுதியில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால் 5 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பிலுள்ள மரங்களும் மூலிகைச் செடிகளும் தீக்கிரையாகின.
தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, கேரளா மாநிலம் வரை பரந்து விரிந்திருக்கிறது. இப்பக்தி காடுகளில் நேற்றிரவு திடீரென்று காட்டுத் தீ பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி வருவதால், சுமார் 5 ஏக்கருக்கு அதிகமான காட்டுப் பகுதியிலுள்ள அரிய வகை மரங்களும் மூலிகை செடிகளும் தீப்பிடித்து கருகி சேதமடைந்தன. மலையடிவார தோட்ட பகுதியில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மலையடிவார கிராம மக்கள் தெரிவித்ததாவது;
மேற்குத் தொடர்ச்சி மலையில் கொழுந்துவிட்டு எரியும் தீயால் எங்கள் கிராமங்களில் கரும்புகை பரவி வருகிறது. மர்மநபர்கள் காட்டுப் பகுதியில் தீ வைத்திருக்கலாம்.அல்லது அசிரத்தையாக யாராவது சிகரெட் அல்லது பீடித் துன்டுகளை அணைக்காமல் வீசியெறிந்து சென்றதன் மூலமாக காட்டுத் தீ பற்றியிருக்கக் கூடும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் கருகி வருகின்றன. தீயை கட்டுப்படுத்த வனத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காட்டுத் தீயை விரைவாக்க கட்டுப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல், மக்கள், மற்றும் வனவிலங்குகளுக்கு நல்லது. ஆகவே வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இவ்வாறு அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் தெரிவித்தனர்.