நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; 2-வது அமர்வு இன்று தொடக்கம்! பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; 2-வது அமர்வு இன்று தொடக்கம்! பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்தொடர் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31- ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதன்பின்னர், மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து,பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11-ம் தேதி நிறைவு பெற்றது. இந்த முதல் கூட்டத்தொடரில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் செயல்பட்டன.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரேசமயத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

மேலும்,உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

இதனிடையே, உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதே சமயம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைப்பு, உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டதில் தாமதம், அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வானது ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com