பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை தவறுதலாக விழுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இம்மாதம் (மார்ச் – 9) சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானிலுள்ள மியான் சன்னு என்ற இடத்தில், வெடிமருந்து நிரப்பப்படாத காலியான பிரமோஸ் போன்ற இந்திய ஏவுகணை தற்செயலாக விழுந்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு இந்திய அரசு தெரிவித்ததாவது:
ராஜஸ்தான் மாநிலத்தில் பராமரிப்புப் பணியின்போது இந்திய ஏவுகணை எதிா்பாராதவிதமாக விண்ணில் பாய்ந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்று விழுந்தது என இந்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்றது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்.
மேலும் இந்த எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து, ஏவுகணை பரிசோதனை குறித்த செயல்பாடுகள், பராமரிப்புக்கான நடைமுறைகள் பற்றிய ஆய்வு நடைபெறுகிறது. ஆயுத அமைப்புகளின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறோம். பாதுகாப்பு தளவாடங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்.
இந்திய ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது துரத்ர்ஷ்டவசமானது. ஆயினும் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதி தருகிறது. இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதுடன் உயர்மட்ட விசாரணைக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
-இவ்வாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் தெரிவித்தார்.