இங்கிலாந்து .. லார்ட்ஸ்.. லீட்ஸ்!

இங்கிலாந்து .. லார்ட்ஸ்.. லீட்ஸ்!

கோமதி. 

இந்தியா –  இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் 175 ஓட்டங்கள்/5 விக்கெட்டுகள் என்ற சாதனையின் கொண்டாட்டம் ஒரு புறம்…

ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் தாக்கூர் மற்றும் ரெய்னா ஏன் இடம்பெறவில்லை என்ற சந்தேகக் கேள்விகள் மறுபுறம்.

52 வயதான ஷேன் வார்னே திடீர் மரணம் ஏற்படுத்திய சோகம் மற்றொருபுறம்.

இப்படி எண்ணற்ற உணர்வுகளை கொண்ட கிரிக்கெட் விளையாட்டின் தாயகம் எனக் கருதப்படும் இங்கிலாந்து நாட்டின் மாபெரும் இரு மைதானங்கள் பற்றிய ஒரு அலசல்….

பிரம்மாண்டம் என்றால் "ஹெட்டிங்லி" என்று கூறுமளவிற்கு சுமார் 18 ஆயிரம் பார்வையாளர்கள்  அமர ஏதுவாக  விளங்கும் இந்த மைதானம் "லீட்ஸ்" என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கிலாந்திலிருந்து சுமார் நூறு மைல் தொலைவு!   யார்க்க்ஷயர் கிரிக்கெட் கௌன்ட்டியால் நிறுவப்பட்ட இந்த மைதானம் 1890 முதல் கிரிக்கெட் விளையாட்டை நடத்திவரும் பழமையான ஒன்று.

கால்பந்தில் "மான்செஸ்டர் யுனைடெட்" தனக்கென்று ஒரு தனி இடத்தை இன்றளவும் எப்படி  தக்க வைத்திருக்கின்றதோ, அதே போன்று கவுன்ட்டி கிரிக்கெட் விளையாட்டில் யார்க்க்ஷயர் கௌன்ட்டி அன்றும், இன்றும், என்றும் தனித்து முதன்மையாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் யார்க்க்ஷயர் கௌன்ட்டிக்கு விளையாடுவதை பெருமை வாய்ந்ததாகக் கருதினர். கவுன்ட்டி கிரிக்கெட் என்பது குறிப்பாக இந்திய வீரர்களுக்கு தங்களின் திறனை பட்டை தீட்டுவதற்கு ஏதுவாக அமைந்தது என்று கூறலாம். அதற்கான காரணங்கள் இரண்டு.

முதல் காரணம் –  இங்கிலாந்தின் தட்ப வெட்பம் எனலாம். . காற்று, வெயில், குளிர் மற்றும் மழை என பலதரப்பட்ட சூழ்நிலைகளில் விளையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பம் இங்கு கிடைக்கிறது.. வெளிநாடுகளில் சென்று விளையாடுவதற்கு இந்த கவுண்ட்டி கிரிக்கெட் என்பது ஒரு நல்ல முன்னோட்டமாக பலருக்கு அமைகிறது என்று கூறலாம். சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியவர்கள் யார்க்க்ஷயர் கவுன்ட்டிக்கு விளையாடியிருக்கிறார்கள்.  இந்த கவுன்ட்டி கிரிக்கெட் பற்றி சச்சின் குறிப்பிடுகையில் "இங்கிலிஷ் கிரிக்கெட்டை" புரிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருந்ததாக கூறுகிறார்.

இரண்டாவது காரணம் – இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் பந்து! பொதுவாக  டியூக், எஸ்.ஜி  மற்றும் கூக்கபரா என மூன்று விதமான பந்துகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தலாம். இந்தியாவில் எஸ்.ஜி பந்தைக் கொண்டு விளையாடுகின்றனர். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணி டியூக் பந்தையும், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை  கூக்கபரா பந்தையும் உபயோகிக்கிறார்கள்.  கிரிக்கெட் பந்தை  பற்றி குறிப்பிடும்போது கிரிக்கெட் மைதானம் பற்றியும் கோடிட்டு காட்ட  வேண்டும். அயல் நாடுகளில் "க்ரீன் பிட்ச்" எனப்படும் சுழற்பந்துக்கு ஏதுவான மைதானங்கள் அதிகம். இப்படி கவுண்ட்டி கிரிக்கெட் பலதரப்பட்ட அனுபவங்களை விளையாட்டு வீரர்களுக்கு அளித்து வந்தது. ஆனால் இன்று  ஐபிஎல்  கிரிக்கெட்டின் புதிய பரிணாம வளர்ச்சியானது –  வீரர்களை மட்டும் அல்ல பார்வையாளர்களையும் தன்பால் இழுக்க துவங்கி விட்டது. இதனால் கவுன்ட்டி கிரிக்கெட் இப்பொழுது பெரிதாக பேசப்படுவது இல்லை.

இப்படி யார்க்க்ஷயர் கிரிக்கெட்டுக்கு மட்டும் பெயர் போன இடமல்ல. இயற்கை அன்னையின் மொத்த அழகும் கொட்டிக் கிடக்கும் ஓரிடமும்கூட!

மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்,
இத்திருத் துறந்து ஏகு' என்ற போதினும்,
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை

ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவான்

என  ராமனை கம்பன் வர்ணித்தானே, அந்த கம்பன் இங்கு வழியெல்லாம் கொட்டிக்கிடக்கும் மலர்களைக் கண்டிருந்தால் ஆனந்தக் கூத்தாடி இருப்பான். குறிப்பாக வசந்த காலம் என்று சொல்லும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இங்கு நிகழும் இயற்கையின்  அற்புதம் அபாரம்.

எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா!

என்ற பாவேந்தரின் பாடலுக்கேற்ப எங்கு பார்த்தாலும் வண்ண வண்ணபூக்கள் பாய் விரிந்திருக்கும் காட்சி அழகோ அழகு.

"கிரிக்கெட்டின் மெக்கா" என்று போற்றப்படும்  "லார்ட்ஸ்" மைதானம் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனில் அமைந்துள்ளது. கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரனின் கனவு, ஒரு நாள் லாட்ஸில் விளையாட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அந்தளவு அழகு, நேர்த்தி, கலைவடிவம் இப்படி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு அதிசயம் கொண்டது லார்ட்ஸ். இந்த மைதானம் 1814 -ம் ஆண்டு திரு.தாமஸ் லார்ட் என்னும் கட்டிட  வல்லுநரால் உருவாக்கப்பட்டது.

"ஹானர்ஸ் போர்டு" என்றழைக்கப்படும் கௌரவப் பலகை லார்ட்ஸ் மைதானத்தில் அமைந்துள்ளது. எந்த ஒரு பேட்ஸ்மேன் நூறு ஓட்டங்கள் அல்லது எந்த ஒரு பௌலர் 5 விக்கெட்கள் ஒரு இன்னிங்சில் எடுக்கிறார்களோ அவர்களின் பெயர் இந்த பலகையில் பொறிக்கப்படும். அது மட்டுமல்ல, இங்கு மிகவும் பழமை வாய்ந்த விளையாட்டு அருங்காட்சியகம் ஒன்றும் ஆமைந்துள்ளது. லார்ட்ஸில் வழங்கப்படும் உணவும் மிகவும் பிரபலம். எனவே இங்கிலாந்து சுற்றுலா தளங்களில் லார்ட்ஸ் மைதானம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக அமைகிறது என்று  கூறலாம்.

லண்டன் மாநகரத்தின் நடுநாயகமாக விளங்கும் இம்மைதானத்திலிருந்து "தி ஷார்ட்" (The Shard) என்றழைக்கப்படும் லண்டனின் மிக உயரமான கட்டிடம்,  ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. பக்கிங்கம் அரண்மனை, வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்றம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம், ஹைடு பார்க் என அடுக்கிக்கொண்டே செல்லுமளவிற்கு இவ்வரங்கத்தை சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு.

கிரிக்கெட்டில் இரு துருவங்களாக விளங்கும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு ஆண்டுகளுக்கொரு முறை விளையாடும் "ஆஷஸ்" என்னும் டெஸ்ட் தொடர் கிரிக்கெட் ஆர்வலர்களால் கூர்ந்து கவனிக்கப்படும் ஒன்று. ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் ஒரு போட்டி இங்கிலாந்தில் நடப்பதாக இருந்தால், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும். இந்த ஆஷஸ் கோப்பை எப்பொழுதுமே லார்ட்ஸில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

இத்தகு பெருமை மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக, இந்திய அணி வருகிற  ஜூலை மாதம் 14-ம் தேதி ஒரு நாள் போட்டி ஆடவிருக்கிறது. வாருங்கள், விளையாட்டை ரசிப்பதோடு,  இந்த விளையாட்டு அரங்கத்தின் பழமை மற்றும் பிரம்மாண்டத்தையும் ரசிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com