தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியாருடன் சேர்ந்து ஊழல் செய்திருப்பதாக செபி குற்றம் சாட்டியுள்ளது.
தேசியப் பங்குச் சந்தையின் செயல் அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் 2013 முதல் 2016 வரை இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி பணியிலிருந்து விலகினார். இந்நிலையில், தேசியப் பங்குச் சந்தையின் வணிக திட்டங்கள், பங்குச் சந்தையின் ஏற்றம், இறக்கம் குறித்த கணிப்புகள், ரகசியங்கள் என பலவற்றையும் இமயமலை சாமியார் ஒருவருடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாக செபி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஆனந்த சுப்ரமணியன் என்பவரை தேசியப் பங்குச் சந்தையின் உயர் பதவியில் விதிமுறைகளை மீறி சித்ரா ராமகிருஷ்ணா அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா அந்த இமயமலை சாமியாரை நேரில் சந்தித்ததில்லை என்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தொடர்பு இருந்ததாகவும், விள்க்கமளித்தார். ஆனால், அவர் கங்கைக் கரையில் அந்த சாமியாரை 20 வருடங்களுக்கு முன்பு நேரில் சந்தித்ததையும் செஷல்ஸ் தீவில் அவரோடு கடலில் குளித்ததையும் மின்னஞ்சல் மூலம் செபி அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனுக்கும், ஆனந்த் சுப்ரமணியனுக்கும் தலா ரூ.2 கோடியும் செபி அபராதம் விதித்தது. சித்ரா பதவியில் இருந்த மூன்று ஆண்டு காலத்தில் பல நிறுவனங்கள் அவரது செயல்பாடு குறித்து செபிக்கு புகார்கள் அளித்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக செபி இப்போதுதான் புலனாய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது என்பது குரிப்பிடத்தக்கது.