2 லேப்டாப் கூடாது: சென்னை விமான நிலையத்தில் நிதியமைச்சருக்கு அனுமதி மறுப்பு!
இன்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்களை எடுத்து வந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிதியமைச்சர் தன்னுடன் 2 லேப்டாப்கள் கொண்டுவந்ததால், அவர் யாரென்று அறியாமல் மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவர் அவரை விமான நிலையத்துக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினார். அதனால் நிதியமைச்சருக்கும் அந்த போலீஸுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் பயணிகளுக்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார். ஆனாலும், உதவி ஆய்வாளர் அனுமதி மறுத்தார். இதற்கிடையே இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளூக்கு தெரிய வர உடனே விரைந்து வந்து அமைச்சரிடம் மன்னிப்பு கோரினர்.
இதையடுத்து, அமைச்சரை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை எஸ்.ஐ-யும் மன்னிப்பு கோர, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன் 2 லேப்டாப்களுடன் பயணிக்க அனுமதிக்கப் பட்டார். இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.