உக்ரைனில் ரஷ்யாவுடனான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்திய மாணவர்களை ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு வரச்செய்து தாயகம் அழைத்து வரும் முயற்சிகளில் இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தன் வளர்ப்பு நாய்க்கு அனுமதி கிடைக்காததால், தாயகம் வர முடியாமல் தவிப்பதாக இந்திய மாணவர் ரிஷப் கவுசிக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த ரிஷப் கவுசிக் என்ற அந்த மாணவர் இதுகுறித்து கூறியதாவது;
நான் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு ரேடியோ எலக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறேன். நான் ஆசையாக வளர்க்கும் என் செல்ல நாயையும் இந்தியாவுக்கு கொண்டுவர விரும்புகிறேன். அதற்குத் தேவையான ஆவணங்களும் தயாராக வைத்திருக்கிறேன். ஆனாலும் என் நாயை அனுமதிக்க மறுக்கின்றனர்.
இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகமும் எனக்கு உதவ முன்வரவில்லை. தற்போது கீவ்-ல் இருக்கும் பதுங்கு குழியில் தங்கியுள்ளோம்.
அடிக்கடி வெடிகுண்டு சத்தம் கேட்பதால் தனது வளர்ப்பு நாய் அடிக்கடி அழுதுகொண்டே இருக்கிறது. இந்த வாயில்லா ஜீவனை இங்கு தவிக்க விட்டுவிட்டு நான் மட்டும் சுயநலமாக இந்தியா திரும்ப விரும்பவில்லை.
-இவ்வாறு தெரிவித்த ரிஷப், தன் செல்ல நாயுடன் சேர்த்து வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.