5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Published on

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிக கன மழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் வட பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருக்கிறது.

வருகிற 17, 18-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 2 நாட்கள் (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

மத்திய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com