ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபன்கள்: உலக நாடுகள் அச்சம்!

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபன்கள்: உலக நாடுகள் அச்சம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்ற கையோடு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேறச் செய்தார். அதையடுத்து அந்நாடு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் பழமைவாதிகளான தலிபான்கள் வசம் சென்றுள்ளது.

தாலிபான்கள் ஒவ்வொரு மாகாணமாக முன்னேறி முக்கிய நகரங்களை கைப்பற்றி இறுதியாக தலைநகர் காபூலையும் நேற்று (ஆகஸ்ட் 15) தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதயடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆட்சியை தாலிபன்கள் வசம் ஒப்படைத்து விட்டு நாட்டைவிட்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது. தற்போது தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகை தலிபான்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆப்கனில் அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடி விவாதிக்கிறது.

ஆப்கானில் நடந்து வரும் இந்த அதிரடி அரசியல் காட்சிகள் உலகை அச்சமடையச் செய்துள்ளது. இதையடுத்து பல நாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டு அதில் பணியாற்றியவர்கள் தம் சொந்த நாடுகளுக்கு திரும்பி விட்டனர். உள்நாட்டிலும் தீவிரவாதமும் பழமைவாதமும் கொண்ட தலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால், ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து உடைமைகளுடன் பாகிஸ்தானில் தஞ்சம் புக முற்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை பாதுகாப்பாக மீட்க அதிபர் பைடன் ஆயிரம் வீரர்களை அங்கு அனுப்பியுள்ளார். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில ஹெலிகாப்டர்கள் வந்த நிலையில் அதில் ஏறி அதிகாரிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர். அங்கிருந்த அமெரிக்க கொடியும் அகற்றப்பட்டுவிட்டது. மேலும் வெளியே செல்லும் முன் முக்கிய ஆவணங்கள் பலவற்றை அமெரிக்க அதிகாரிகள் எரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காபூலை விட்டு வெளியேறத் துடித்து விமான நிலையத்தில் முண்டியடித்த பொதுமக்களால் அங்கு பெரும் குழப்பம் நிலை வருகிறது. ஆப்கானிஸ்தானில் வாழ அஞ்சிய பொதுமக்கள் பலரும் காபூல் நகர விமான நிலையத்துக்குள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து தாலிபன்கள் அங்கு துப்பாக்கிசூடு நடத்தி, விமான நிலையத்தை மூடினர். இதனால் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் பயணிகள் சேவை அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று 129 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம் இன்று மீண்டும் செல்வதாக இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது…

ஆப்கானிஸ்தான் தலநகர் காபூலையும் அதிபர் மாளிகையையும் தாலிபன்கள் கைப்பற்றியதையடுத்து "போர் முடிந்துவிட்டது" என தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சட்டென ஒரே நாளில் சூழல் மாறிவிட்டதால், காபூல் முழுக்க குழப்பம் நிலவி வருகிறது. குடிமக்களும், வெளிநாட்டினரும் காபூலை விட்டு வெளியேறிவிட முயற்சி செய்து வருகிறார்கள்.

காபூலுக்குள் தாலிபன்கள் புகுந்தது முதலே அதிபர் கானி எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் கானி வெளியேறிய பிறகுதான் தாலிபன்கள் காபூலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர் அண்டை நாடான உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் நகருக்குச் சென்றிருக்கலாம் என்று அல்ஜசீரா தொலைக்காட்சி கூறியது.

நாட்டில் ரத்தம் சிந்தப் படுவதைத் தவிர்ப்பவதற்காகவே இந்தக் கடினமான முடிவை எடுத்ததாக தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளார்.

"வாள் மற்றும் துப்பாக்கியைக் கொண்டே தாலிபன்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்களின் மரியாதையைக் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.

காபூல் நகரை தாலிபன்கள் சூழ்ந்து கொண்டதுமே மக்கள் மனதில் பீதி குடியேறியது. தங்களது வாகனங்களையும் உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தனர்.

அச்சத்தில் மக்கள் பணத்தை எடுக்க முற்பட்டதால் நாள் முழுவதும் வங்கிகளில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டன. ஏடிஎம் மையங்கள் நிரம்பியிருக்கின்றன.

இதனிடையே தாலிபன் அமைப்பின் துணைத் தலைவர் முல்லா பராதார் அகுந்த், ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதை உறுதிப்படுத்துவோம் என்று புதிய காணொளியொன்றை வெளியிட்டுப் பேசியுள்ளார். அந்த காணொளியில் அவர் பேசியதாவது:

ஆப்கான் மக்கள் தங்களுடைய வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. இப்போது சரி செய்வதற்கான நேரம். எங்களுடைய சேவையை இந்த தேசத்துக்கு வழங்குவோம். ஒட்டுமொத்த தேசத்திலும் அமைதியை ஏற்படுத்துவோம். மக்களின் வாழ்வை மேம்படுத்த இயன்ற அனைத்தையும் செய்வோம். நாங்கள் இப்படி அதிரடியாக வருவோம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

-இவ்வாறு முல்லா பராதார் அகுந்த் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளியில் பேசும்போது அவரைச் சுற்றிலும் பிற தாலிபன் அமைப்பின் போராளிகளும் நின்றிருந்தனர்.

தீவிரவாதமும் பழமைவாதமும் கொண்ட தாலிபான்களால் தங்களுக்கு தீங்கு நேரும் என்று அந்நாட்டு பெண்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதன் மூலம் ஆப்கனின் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கிய நிலைக்குப் போய்விடும் என்று அஞ்சப் படுகிறது.

இதனிடையே ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. தலிபான்களால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதால், தனது தூதரகத்தை மூடப் போவதில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.

இதனிடையே, ஆப்கன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது. ஆகஸ்ட் மாதம் முழுமைக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை தலைமை தாங்கி நடத்திவரும் இந்தியாவின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் என்ற பெயரை ''இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்'' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது தாலிபான்கள் அமைப்பு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com