செய்திகள்

ஓடும் ரயிலில் தீ வைப்பு: 3 பேர் பலி!

கல்கி டெஸ்க்

கேரள மாநிலம், கோழிக்கோடு எலத்தூர் அருகே ஓடும் ரயிலில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து பயணி ஒருவர் தன்னோடு பயணம் செய்த சக பயணி ஒருவரை தீ வைத்து எரித்ததில் 8 பேர் தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் ஆலப்புழா - கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் நடந்துள்ளது. இதற்கிடையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ரயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு வயது குழந்தை உட்பட, மூன்று பேரின் உடல்கள் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்குப் பிறகு பயணிகள் ரயிலில் இருந்து குதித்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்தில் அலறிய பயணிகள் அவசர சங்கிலியை இழுத்ததைத் தொடர்ந்து, ரயிலின் வேகம் குறைந்தபோது ​​தீ வைத்த நபர் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இச்சம்பவத்தில் தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்ததில், இரு பயணிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதோடு, தீ வைத்த நபருடையது என சந்தேகிக்கப்படும் டைரியில் கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் என்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாவோயிஸ்டுகள் செயலா அல்லது பயங்கரவாதிகளின் சதியா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT