பத்மப்ரியா
உங்கள் சமையல் வேலையை எளிதாக்கவும், உணவின் சுவையை அதிகரிக்கவும் சில பயனுள்ள டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.
சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால், மிருதுவாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும்.
சிறிது மிளகை எண்ணெய் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால், எண்ணெய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளை வேக வைக்கும் போது, ஒரு துளி எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு பிழிந்து விட்டால், அந்த காய்கறிகள் சீக்கிரம் வெந்துவிடும்.
சேமியா பாயசம் செய்யும் போது சேமியாவை வெறும் வாணலியில் வறுத்து விட்டு பாலில் கலந்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிர் உதிராக வரும்.
மாங்காய் சீசன் வருவதால், துவையல்களில் புளிக்கு பதிலாக மாங்காய் சேர்க்கலாம்.
பொரியல்களில் தேங்காய்த் துருவலுக்கு பதிலாக, கேரட், துருவலை தூவலாம். நிறமும் அழகாக இருக்கும். கூடுதல் சத்தும் கிடைக்கும்.
தேங்காய்ப்பால் எடுப்பதற்கு தேங்காய்த்துருவலை அரைக்கும் போது வெந்நீர் தெளித்து அரைத்தால், பால் கெட்டியாகக் கிடைக்கும்.
கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்தால், வேக வைக்கும் போது கொழுக்கட்டை விரிசல் அடையாமல் இருக்கும்.
பருப்பு உருண்டை குழம்புக்கு தேங்காயை அரைத்து சேர்ப்பதற்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
பச்சைப் பயறு, பாசிப்பயறு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பின்னர் வேக வைத்தால் ருசியாகவும் இருக்கும், சீக்கிரம் வேகவும் செய்யும்.