நான்சி மலர்
சென்னை வீதிகளில், குறிப்பாக வட சென்னையில், மிகவும் புகழ்பெற்ற ஸ்ட்ரீட் புட் 'அத்தோ' (Atho) . பார்ப்பதற்கு நூடுல்ஸ் போல இருந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் சுவாரசியமான 10 உண்மைகள் இதோ ...
1/10. 1960-களில் பர்மாவில் (மியான்மர்) இருந்து அகதிகளாக சென்னைக்குத் திரும்பிய தமிழ் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அறிமுகப்படுத்திய உணவே அத்தோ.
2/10. பர்மிய மொழியில் 'அத்தோக்' (A-thoke) அல்லது 'தோக்' என்றால் 'சாலட்' (Salad) என்று பொருள். அதுவே மருவி நம்மூரில் 'அத்தோ' என்று அழைக்கப்படுகிறது.
3/10. அசல் பர்மிய முறையில், வேகவைத்த நூடுல்ஸை பல்வேறு மசாலாக்களுடன் சேர்த்து கைகளாலேயே பச்சையாகப் பிசைந்து பரிமாறுவதே இதன் சிறப்பு.
4/10. அத்தோ செய்யப் பயன்படுத்தப்படும் நூடுல்ஸ் சாதாரண மைதா நூடுல்ஸ் கிடையாது. இது அரிசி மாவில் பிரத்யேகமாகச் செய்யப்படும் சற்று தடிமனான நூடுல்ஸ் ஆகும்.
5/10. அத்தோ சாப்பிடும்போது மொறுமொறுப்பாக ஒரு பொருள் கடிபடுமே, அதன் பெயர் 'பேஜோ' (Bejo). இது தட்டப்பயறு அல்லது உடைத்த கடலை மாவைக் கொண்டு செய்யப்படுகிறது.
6/10. அத்தோவின் தனித்துவமான ருசிக்கு மிக முக்கியக் காரணம் 'பூண்டு எண்ணெய்'. அந்த வாசனையான எண்ணெயே அத்தோவின் முதன்மைச் சாஸ் ஆகும்.
7/10. அத்தோ சாப்பிடும் எவருக்கும் இலவசமாக ஒரு கிண்ணத்தில் சூப் தருவார்கள். இது வாழைத்தண்டைப் போட்டு, மிளகு, பூண்டு மற்றும் தேங்காய் பால் சேர்த்துச் செய்யப்படும் ஆரோக்கியமான 'வாழைத்தண்டு சூப்'.
8/10. அத்தோவில் காரத்திற்காக மிளகாய் தூளுக்குப் பதிலாக வறுத்த காய்ந்த மிளகாய்ப் பொடியும், புளிப்புக்காக எலுமிச்சம்பழச் சாறு மற்றும் புளித் தண்ணீரும் சேர்க்கப்படுகின்றன.
9/10. அத்தோவின் அசல் சுவையே அதை மாஸ்டர்கள் கைகளால் பிசைந்து தருவதில் தான் உள்ளது. அப்போதுதான் மசாலாக்கள் நூடுல்ஸுடன் முழுமையாக ஒன்றும்.
10/10. அத்தோ கடைகளில் விற்கப்படும் மற்றொரு ஃபேமஸ் ஐட்டம் 'முட்டை பேஜோ'. இது அத்தோவுக்கு மிகச்சிறந்த சைட்-டிஷ்!