ஆர்.ஜெயலட்சுமி
Soft idli recipe:
1. மிக்ஸியில் இட்லி தோசைக்கு அரைப்பவர்கள் உளுந்து அரைக்கும்போது குளிர்ந்த பானை நீரை ஊற்றி அரைத்தால் உளுந்து உபரியாக இருப்பதுடன் இட்லி தோசை மிருதுவாகவும் இருக்கும்.
2. புழுங்கல் அரிசியில் இட்லி செய்தால் தான் இட்லி மிருதுவாகவும் ருசியாவும் இருக்கும். புழுங்கல் அரிசி கிடைக்காத சமயங்களில் பச்சரிசியை வாங்கி சூடான தண்ணீரில் ஊற வைத்து பிறகு இட்லி செய்தால் மிருதுவாக இருக்கும்.
3. இட்லிக்கு ஊற வைக்கும் அரிசியுடன் ஒரு கைப்பிடி அவலையும் ஊற வைத்து அரைத்தால் இட்லி பூப்போல மென்மையாக இருக்கும்.
4. தோசைக்கு உளுந்து ஊற வைக்கும் போது கொஞ்சம் வெந்தயத்தை சேர்த்து ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் அந்த மாவில் தோசை சுட்டால் மிருதுவாக இருக்கும்
5. இட்லிக்கு அரைப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக உளுந்தை ஊறப் போட்டாலே போதும் பிறகு அரைத்தால் உளுந்து மாவு நிறைய வரும் அதே நேரம் இட்லியும் பூப்போல இருக்கும்.
6. இட்லிக்கு அரைத்த மாவில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கலந்து பிறகு இட்லி செய்தால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
7. தோசை கல்லில் தோசை சுடுவதாக இருந்தால் மாவு ஒரு கரண்டியில் எடுத்து ஊற்ற கொஞ்சம் கெட்டியாக இருந்தால் கல்லில் ஒட்டாமல் பொன்னிறமாக வெந்து சுலபமாக எடுக்க முடியும்.
8. இட்லி தட்டில் ஒவ்வொரு குழியிலும் சிறிது நல்லெண்ணெயை விரலில் எடுத்து தடவி விட்டு பிறகு மாவை ஊற்றி குக்கரில் வைத்து ஆவி வந்ததிலிருந்து பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
9. மாவு புளித்த பிறகு கரண்டியால் அடித்து கலக்கக் கூடாது. லேசாக ஒருமுறை கலந்துவிட்டு இட்லி ஊற்ற வேண்டும்.
10. மிதமான தீயில் 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைத்தால் போதும். வெந்ததும் 2 நிமிடங்கள் கழித்து தண்ணீர் தெளித்து எடுத்தால் துணியில் ஒட்டாமல் பஞ்சு போல வரும்.