சி.ஆர்.ஹரிஹரன்
1/11. இட்லிக்கு அரைத்த மாவு நிறைய மீந்து போய்விட்டால் அந்த மாவில் சிறிது அரிசிமாவு, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்துப் பிசைந்து சுவையான புளி உப்புமா செய்யலாம்.
2/11. பச்சை மிளகாயை லேசாக கீறி விட்டு வதக்கினால் வெடித்துச் சிதறாமல் இருக்கும்.
3/11. சேனைக்கிழங்கை வேக வைக்கும்போது சிறு வெல்லக் கட்டியைப் போட்டு வேக வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும்.
4/11. மோர் மிச்சம் வந்துவிட்டதா? அதை புளிக்கவிடாமல் துளி உப்பு சேர்த்து ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் ட்ரேயில் 'மோர் கியூப்' ஆக வைத்து தாகம் எடுக்கும்போது தண்ணீர் விட்டுப் பருகலாம்.
5/11. பேரீச்சம்பழத்தை பால் சிறிது விட்டு அரைத்து, சப்பாத்தி மாவில் கலந்து சப்பாத்தி செய்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
6/11. பொரி உருண்டைமற்றும் வேர்க்கடலை உருண்டைகள் செய்யும் போது வெல்லப்பாகில் சிறிது இஞ்சிச்சாறு சேர்த்துக்கொண்டால் சுவை மிகுந்து இருக்கும்.
7/11. ஒரு கப் சாதத்தை மிக்ஸியில் கூழாக அரைத்து, அதனுடன் ஒரு கப் இட்லிமாவு கலந்து ஒரு கரண்டி தேங்காய்ப்பால் சிட்டிகை சோடா மாவு கலந்து ஊற்ற சுவையான ஆப்பம் தயார்.
8/11. பெருங்காயத்தை மல்லித்தூள் இருக்கும் டப்பாவுக்குள் போட்டு வைத்தால் ரொம்ப நாள் கெடாமல் இருக்கும்.
9/11. கொத்துமல்லி சட்னி அரைக்கும் போது, புளிக்கு பதில் ஒரு பெரிய நெல்லிக்காயை கட் பண்ணி போட்டு அரைத்தால் சட்னி வித்தியாசமான சுவையில் இருக்கும்.
10/11. பீன்ஸ் பொரியல் செய்யும்போது தேங்காயுடன் இரண்டு ஸ்பூன் சீரகமும், பச்சை மிளகாயையும் வைத்து அரைத்துச் சேர்த்தால் பொரியல் வித்தியாசமான மணத்துடன் இருக்கும்.
11/11. தக்காளித் தொக்கில் சரிபாதி அளவு தக்காளி மற்றும் வெங்காயத்தை பயன்படுத்தினால் தயார் செய்யும் தொக்கு மிகவும் சுவையாக இருக்கும்.