கிரி கணபதி
இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்கள் 'ஒரே ஒரு குழந்தை போதும்' என்ற முடிவை எடுக்கிறார்கள். ஒரே குழந்தையாக வளர்வது வரமா அல்லது சிரமமா?
நன்மைகள்:
பெற்றோரின் மொத்த அன்பும், நேரமும் பிரிக்கப்படாமல் இந்த ஒரு குழந்தைக்கே முழுமையாகக் கிடைக்கிறது. எதையும் யாருடனும் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருப்பதில்லை.
பெற்றோரின் வருமானம் முழுவதுமாக ஒருவருக்கே செலவிடப்படுவதால், மிகச் சிறந்த கல்வி, உணவு மற்றும் வசதியான வாழ்க்கை முறை இவர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது.
வீட்டில் உடன் பிறந்தவர்கள் இல்லாததால், இவர்கள் பெரும்பாலும் பெரியவர்களுடனே பேசுவார்கள். இதனால் வயதிற்கு மீறிய அறிவும், முதிர்ச்சியும் இவர்களிடம் காணப்படும்.
சகோதர சகோதரிகளுக்கு இடையே நடக்கும் சண்டைகள், பொறாமை மற்றும் பெற்றோரின் அன்பிற்கான போட்டி இவர்களின் வாழ்க்கையில் இருக்காது. அமைதியான சூழல் நிலவும்.
தனிமையில் விளையாடிப் பழகுவதால், இவர்களுக்குக் கற்பனைத்திறன் அதிகமாக இருக்கும். யாரையும் சார்ந்திருக்காமல் தாங்களே சுயமாகச் செயல்படும் திறனை வளர்த்துக் கொள்வார்கள்.
வீட்டில் விளையாடத் துணை இல்லாததால், விடுமுறை நாட்களில் தனிமையாகவும் சலிப்பாகவும் உணரலாம். மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள உடன் பிறந்தோர் இல்லாத ஏக்கம் வரலாம்.
சிறுவயதில் பொருட்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வருவது சற்று தாமதமாகலாம்.
பெற்றோரின் மொத்த எதிர்பார்ப்பும், கனவுகளும் ஒரே பிள்ளை மீது திணிக்கப்படுவதால், படிப்பிலும் செயலிலும் இவர்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எதிர்காலத்தில், வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முழுவதும் இவர்கள் ஒருவரின் தோளிலேயே விழும். இந்தச் சுமையைப் பகிர்ந்துகொள்ள உடன் பிறந்தவர்கள் இருக்கமாட்டார்கள்.
ஒரே குழந்தை என்பதால் பெற்றோர் அதிகப்படியான பயத்துடனும், பாதுகாப்புடனும் வளர்ப்பார்கள். இதனால் வெளி உலகப் பிரச்னைகளைத் தனியாக எதிர்கொள்ளத் தயக்கம் ஏற்படலாம்.
ஒரே குழந்தையாக இருப்பதில் நன்மை, தீமை இரண்டுமே சம அளவில் உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தையை அதிக செல்லம் கொடுக்காமலும், சமூகத்தோடு பழகவிட்டும் வளர்த்தால், அவர்களால் எந்தச் சூழலையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.