நான்சி மலர்
யோகி மற்றும் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழ்வியல் தத்துவங்கள், எளிய முறையில் மன அமைதியையும், உடல் நலத்தையும் பேண உதவுபவை. அவரின் முக்கியமான 10 பொன்மொழிகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வாழ்க வளமுடன்! என்பது வெறும் வாழ்த்து மட்டுமல்ல, ஒரு மனிதனின் உடல், மனம், அறிவு ஆகிய மூன்றும் செம்மையடைய வழங்கிய மாபெரும் மந்திரம்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது இயற்கையான உணவைச் சரியான அளவில் உண்பதே நோயற்ற வாழ்விற்கு அடிப்படை என்பதாகும்.
தனி மனித அமைதியே உலக அமைதிக்கு வழிவகுக்கும் என்பது ஒவ்வொரு மனிதனும் தனக்குள் அமைதியைக் கண்டால் மட்டுமே இந்த உலகம் அமைதியாகும் என்று பொருள்.
எண்ணம், சொல், செயல் இம்மூன்றிலும் விழிப்புணர்வோடு இருப்பதே தவம். அதாவது காட்டில் அமர்ந்து செய்வது மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் கவனத்துடன் இருப்பதே உண்மையான ஆன்மீகம்.
கவலை என்பது ஒரு மனநோய். அதை ஒழிக்க 'கவலை ஒழித்தல்' பயிற்சியே மருந்து. தேவையற்ற கற்பனைகளும், கடந்த கால நினைவுகளுமே கவலைக்குக் காரணம்.
யாரையும் எக்காலத்திலும் காயப்படுத்தாத சொல்லும் செயலும் அறமாகும். இதன் பொருள் பிறர் மனம் நோகாமல் வாழ்வதே மிகச்சிறந்த ஒழுக்கம் என்பதாகும்.
வேதாத்திரி மகரிஷி போதித்த இரண்டு ஒழுக்க பண்பாடு, நான் எவருக்கும் துன்பம் தரமாட்டேன். துன்பப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்பதாகும்.
மனம் என்பது ஒரு காந்த அலை. அதைச் சீராக வைத்திருந்தால் பிரபஞ்ச ரகசியங்களை அறியலாம். இதன் பொருள் மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் எல்லையற்ற ஆற்றலைப் பெற முடியும் என்பதாகும்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - இவை மூன்றும் வாழ்வின் ஆதாரத் தூண்கள் சமூகத்தில் ஒரு மனிதன் சிறந்து விளங்க இவை அவசியம்.
அறிவு என்பது அனுபவத்தின் முதிர்ச்சி அதாவது வெறும் புத்தக அறிவு போதாது, அனுபவங்கள் மூலமே ஒருவன் உண்மையான ஞானத்தைப் பெறுகிறான்.