கே.எஸ்.கிருஷ்ணவேனி
கன்னியாகுமரிக்கு வருபவர்கள் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும், கன்னியாகுமரி அம்மனையும் தரிசித்துவிட்டு சென்று விடுகிறார்கள். உண்மையில் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க ஒரு நாள் போதாது.
லெமூர் கடற்கரை நாகர்கோவிலில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நீண்ட மணல் பரப்பை கொண்ட இக்கடற்கரையை 2023 ல் இந்தியா டுடே டூரிசம் சர்வே & விருதுகள் சிறந்த கடற்கரை என தேர்ந்தெடுத்துள்ளது.
இதனை குட்டி மாலத்தீவு, கணபதிபுரம் கடற்கரை, ஆயிரம் கால் பொழிமுகம் என்று பல பெயர்களாலும் அழைக்கிறார்கள்.
பச்சையும் நீலமும் கலந்த அழகிய கடல், அண்ணாந்து பார்க்க வைக்கும் தென்னை மரங்கள் நிறைந்த இந்த குட்டி மாலத்தீவு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேரமும் கடற்கரையை பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.
இங்கு தங்கும் விடுதிகள் எதுவும் இல்லை. இங்கு குளிப்பதற்கோ, மது அருந்துவதற்கோ அனுமதி இல்லை.
திரைப்பட படப்பிடிப்பிற்கு பிரபலமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று.
பேச்சிப்பாறை அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்காக வரும் தண்ணீர் பல வயல்களுக்கு பாசனம் செய்து அரபிக் கடலில் கலக்கும் கடற்கரைகளில் இதுவும் ஒன்று. இது மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
கடற்கரை மிகவும் சுத்தமாகவும், நன்கும் பராமரிக்கப்படுகிறது. இங்கு சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் காண மக்கள் நிறைய பேர் கூடுகிறார்கள். சூரிய உதயத்தின் போதும் அஸ்தமனதின் போதும் வானத்திலும், கடல் நீரிலும் வண்ண வண்ண காட்சிகளை கண்டு களிக்க முடிகிறது.
கன்னியாகுமரிக்குச் செல்லும் அனைவரும் மறக்காமல் இந்த லெமூர் கடற்கரையை சென்று பார்க்கலாம். இதன் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகும், பசுமை நிறைந்த இடங்களும் அனைவரையும் கவரக்கூடியவை. குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க சிறந்த இடம்.