ஆர்.ஜெயலட்சுமி
மருதோன்றி இலைகளை உலர்த்தி, அதை அப்படியே தலையணை உறையில் வைத்துப் பயன்படுத்தினால், ஆழ்ந்த உறக்கம் வரும். தூக்க மாத்திரைகளின் அவசியமே இருக்காது.
கிராம்பு, பச்சை கற்பூரம், துளசி கொஞ்சம் உப்புடன் கொஞ்சம் நெய் விட்டு அரைத்து பல்லில் வைத்து அழுத்தினால் பல் வலி நின்று விடும்.
அருகம்புல்லை சுத்தமாக கழுவி வாயில் போட்டு நன்றாக மென்று பல்வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.
சாதாரண வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், நீர்மோரில் உப்பு கருவேப்பிலை கரைத்து திரியும் பக்குவம் வரை, சுட வைத்து இரண்டு மூன்று முறை அருந்தினால் குணமாகும்.
நல்லெண்ணெய் நன்கு பொங்கும்படி காய்ச்சி அதில் ஐந்தாறு மிளகுகளை தட்டி போட்டு அந்த எண்ணையை தலைக்கு தேய்த்து குளித்தால் மிகவும் நலன் விளையும். இதனால் கண் பார்வை தெளிவடையும் ஒற்றைத் தலைவலியும் நீர்பாரம் முதலிய நோய்களும் தீரும்.
வயிற்றில் இரைச்சல் இருந்தால் கொஞ்சம் ஓமத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மூடி வைத்து விட வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து திறந்து பார்த்தால் காபி டிகாஷன் போல் ஆகிவிடும். இதை வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று எரிச்சல் நீங்கிவிடும்.
வயிறு உப்புசமாக இருந்தால் கொஞ்சம் சுக்கும் சீரகமும் சம அளவு எடுத்து வெறும் வாணலியில் வறுத்து பொடித்து சாதத்தில் கலந்து பிசைந்து சாப்பிட வேண்டும்.
வாயிலும் உதட்டிலும் நாக்கிலும் சிறு புண்கள் வந்தால் மணத்தக்காளி கீரை அல்லது துளசி இலை, இவைகளில் ஏதாவது ஒன்றை பறித்து சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று தின்றுவிட்டால் புண்கள் மாயமாய் மறைந்து விடும்.
சுண்டைக்காய் வற்றலுடன் இரண்டு மோர் மிளகாய் சிறிது பெருங்காயம் ஆகியவற்றை நன்கு வறுத்து பொடி செய்து சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது நெய் போட்டு உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பூச்சிகள் அடியோடு மறைந்து விடும்.
புளிய இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்த பின்னரே ஆறவிட்டு வெதுவெதுப்பாக ஆனவுடன் அதில் குளித்து பாருங்கள் உடம்பு வலி மறைந்து போகும்.
அரைக் கீரையை பறித்து பயத்தம் பருப்புடன் சேர்த்து சமைத்து சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நரம்புகள் வலுப்பெறும்.
சுக்கு மிளகு இரண்டையும் ஒரு ஸ்பூன் பால் விட்டு அரைத்து நெற்றி பொட்டிலும் மூக்கின் மேலும் நெற்றியிலும் தடவினால் கால் மணி நேரத்தில் தலைவலி பறந்து ஓடிவிடும்.
நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் அரிப்பும் புண்ணும் உண்டானால் கொஞ்சம் துளசி இலையை அம்மியில் வைத்து சில சொட்டு தேங்காய்ப்பால் விட்டு அரைத்து, அந்த மெழுகை நெத்தியில் தடவி வந்தால் அரிப்பு ஏற்படாது. புண்ணும் ஆறிவிடும்.