சி.ஆர்.ஹரிஹரன்
இளநீர், முலாம்பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி, மோர், கூழ் உள்ளிட்டவற்றில் ஒன்றையாவது தினமும் ஒரு முறை சாப்பிட வேண்டும்.
அதிகமாக வெயில் உள்ள சமயங்களில் வெளியில் செல்வதைத் தவிர்த்து விடுங்கள்.
உணவைப் பொறுத்த வரை, மசாலாக்கள் இல்லாத எளிய உணவை இந்த சீசனில் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
இந்த சமயத்தில் தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளியுங்கள்.
வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், வெள்ளைப்பூசணி, புடலங்காய், கேரட், பீட்ரூட், வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றை கலந்த வெஜிடபிள் சாலட்டை தினமும் ஒரு வேளையாவது சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கும்.
காபி, டீ குடிப்பதால், சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்படும். இது நம் உடலில் நீர் வறட்சியை ஏற்படுத்தும். ஆகையால் சம்மரில் சூடான பானங்கள் அதிக அளவில் பருகுவதைத் தவிர்த்து விடுங்கள்.
ஒரு சிலருக்கு, இந்த சீசனில் வியர்வை அப்படியே துடைக்கத் துடைக்க கொட்டிக்கொண்டே இருக்கும். உடலிலும் வியர்வை நாற்றம் அடிக்கும். அப்படிப்பட்ட ரகம் எனில், நீங்கள் குளிக்கும் பக்கெட் தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு முன்பாக, சிறிதளவு புதினா இலைகள் மற்றும் கற்பூரத்தைப் போட்டு, பிறகு குளியுங்கள். ஃபிரெஷ்ஷாக உணர்வீர்கள்.
பொதுவாக கோடைக்கால சமயத்தில் உணவு சாப்பிடும்போது நம் உடல் சூடு அதிகமாகும். அதனால் உணவை ஒரே நேரத்தில் சாப்பிடாமல் சிறிது இடைவெளி விட்டு கொஞ்ச கொஞ்சமாக பிரித்துச் சாப்பிட வேண்டும்.
வெயிலில் நமக்கு வரக்கூடிய அத்தனை பாதிப்புகளையும் தீர்க்க வல்லது இளநீர். அதனால் தினமும் ஒன்றிரண்டு இளநீர் உங்கள் உணவு அட்டவணையில் இடம் பெறட்டும்.
சுட்டெரிக்கும் வெயில் சமயத்தில் நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும், பழச்சாறுகள் அருந்த வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்து அதிகமாக இருக்கிற தர்பூசணியை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்.
உடம்பில் நீர்ச்சத்து குறையும் என்பதால் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் இந்த சமயத்தில் பருக வேண்டும்.
குளிக்கும்போது சோப்பை பயன்படுத்துவதைத் தவிர்த்து பயறு, வெட்டி வேர், சந்தனம், மஞ்சள், எலுமிச்சைத் தோல் சேர்த்து அரைத்த பொடியை பயன்படுத்தலாம். இதனால் கட்டிகள், வேர்க்குரு, அரிப்பு போன்ற வெக்கை நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம்.