ஆர்.ஜெயலட்சுமி
பாட்டி வைத்தியம் என்பது நம் முன்னோர்கள் வழிவழியாகக் கற்றுக்கொடுத்த ஒரு பொக்கிஷம். சில முக்கியமான மற்றும் எளிமையான பாட்டி வைத்திய குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மருதாணி இடும்பொழுது சளி பிடிக்காமல் இருக்க: மருதாணியுடன் நொச்சி இலையும் அரைத்து விட்டால் சளி பிடிக்காது.
உடல் ஆரோக்கியம் பெற: கேழ்வரகு மாவு, எள்ளு சிறிது, வெல்லம் சேர்த்து இடித்து அதை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறலாம்.
மூட்டு வலி குணமாக: கோதுமையை பொன்னிறமாக வறுத்து திரித்து, சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
உடல் புத்துணர்ச்சி பெற: துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில் இரவு ஊற வத்து காலையில் அந்த நீரை பருகினால் உடல் புத்துணர்ச்சி பெரும்.
ஆயுளைக் கூட்ட: உணவின் ஒவ்வொரு கவனத்தையும் ருசித்து ரசித்து உணர்ந்து உண்ண வேண்டும். அது ஆயுளைக் கூட்டும்; உற்சாகம் தரும்.
வயிற்று உப்புசம் நீங்க: சாதம் வடிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூளையும், சிறிது பனங்கற்கண்டும் சேர்த்து சூட்டோடு சாப்பிட்டு வர குணம் கிடைக்கும்.
வாயுத்தொல்லை நீங்க: வெள்ளைப் பூண்டை பசும்பாலில் வேகவைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
தும்மலும் சளியும் உடனே குறைய: பசும் பாலில் சிறிது ஓமத்தை போட்டு காய்ச்சி சாப்பிட்டு வந்தால் தும்மலும் சளியும் உடனே குறையும்.
வெள்ளைப்படுதல் குணமாக: மாதுளம் பழம் விதைகளை அரைத்து பசுவின் பால் விட்டு கலந்து குடிக்க நீர்க்கடுப்பு நீங்கும், வெள்ளைப்படுதல் குணமாகும்.
சொரி, சிரங்கு நீங்க: வெந்நீரில் வேப்பமர இலையைப் போட்டு குளித்தால் சொரி, சிரங்கு, அலர்ஜி போன்றவற்றை நீக்கிவிடும்.
செரிமானத்துக்கு: ரசம் வைக்கிற பொழுது அது கொதித்து வருகிற நிலையில் ஒரு கைப்பிடி கொத்தமல்லியை போட்டு அரை மணி நேரம் மூடி வைத்த பிறகு சாப்பிட வேண்டும். இது செரிமானத்துக்கு உதவும்.