அந்தமானில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் மீண்டும் கனமழை!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களில் இரண்டு காற்றழுத்தங்கள் உருவாகி, மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிக்கு நாளை நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும்போது சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும். இதனிடையே இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.