

இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பங்களில் வரவுக்கேற்ற செலவு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் எதிர்பாராத செலவுகளுக்கு சேமிப்பு இல்லை என்றால் சில நேரங்களில் வாழ்க்கையே திண்டாட்டமாகி விடுகிறது. இதனால் எப்பொழுதுமே கையில் பணம் இல்லாமல் பற்றாக்குறை நிலையிலேயே இருந்து விடுகின்றனர். அந்த வகையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் செய்யக்கூடாத பண தவறுகள் (Money mistake) குறித்து இப்பதிவில் காண்போம்.
முதல் சேமிப்பு; முக்கிய சேமிப்பு:
வருமானம் வந்தவுடன் வீட்டு வாடகை, மின் கட்டணம், மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் ஆர்டர், வார இறுதி சாப்பாடு என வரிசை கட்டி நிற்கும் செலவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். அதன் பிறகு மிச்சம் இருந்தால் சேமிப்பு என்ற தவறை செய்கின்றனர். ஆனால் முதலில் சேமிப்பிற்கு பணத்தை ஒதுக்கி விட்டுத்தான் செலவு செய்ய வேண்டும். இந்தப் பழக்கம் இருந்தால் ஒவ்வொரு மாதமும் நிதி கட்டுப்பாட்டில் இருக்கும்.
இ.எம்.ஐ இல்லாத வாழ்க்கை; இலகுவான வாழ்க்கை:
இன்றைய சூழ்நிலையில் இ.எம்.ஐ இல்லாத வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் பலரும் இருக்கின்றனர். மொபைல், டிவி, பைக், கிரெடிட் கார்டு என அனைத்திற்கான இ.எம்.ஐ-கள் சேர்ந்து வருமானத்தின் பெரிய பகுதியை உறிஞ்சி விடுகிறது. இதனால் வருமானம் இல்லை என்றாலோ அல்லது தாமதமானாலோ ஒருவித மன அழுத்தம் ஏற்படுகிறது. இ.எம்.ஐ வசதி போல தோன்றினாலும் அது நீண்ட கால நிதி சுதந்திரத்தை குறைக்கும் சங்கிலி என்பதை பலரும் உணராமல் இ.எம்.ஐ வலையில் விழும் தவறு செய்கின்றனர்.
பணத்தை வேலை செய்ய வைப்பது:
பலரும் வங்கியில் பணம் இருந்தால் வளர்ந்து விடும் என்று நம்புகின்றனர். ஆனால், வங்கி சேமிப்பு பாதுகாப்பதற்காக மட்டும்தான். அந்த பணத்தின் வாங்கும் சக்தி பண வீக்கம் காரணமாக ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. முதலீடு என்பது பணத்தை வேலை செய்ய வைப்பது. பல நடுத்தர குடும்பங்களின் வீடு, குழந்தைகளின் கல்வி, ஓய்வு காலம் போன்ற இலக்குகளை அடையாமல் தவிப்பதற்கு இந்த வேறுபாடை புரிந்து கொள்ளாமல் செய்யும் தவறுதான் (Money mistake) காரணம். ஆகவே, பணத்தை வேலை செய்ய வைத்து வருமானத்தை இரட்டிப்பாக்குங்கள்.
இன்சூரன்ஸ் என்ற பாதுகாப்பு கவசம்:
"நமக்கு எதுவும் ஆகாது" என்ற எண்ணத்தில் பலரும் இன்சூரன்ஸை தேவையற்ற செலவாக பார்க்கின்றனர். இது தவறான கண்ணோட்டம் ஆகும். வாழ்க்கை கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் நாம் எடுத்திருக்கும் காப்பீடு,
குடும்பத்தில் எதிர்பாராத சம்பவம் ஏற்படும்போது, பல வருட சேமிப்பு ஒரே நேரத்தில் கரைந்து போகும் போது, அவசர மருத்துவ தேவைகளுக்காக இன்சூரன்ஸ் பாதுகாப்பு கவசம் போல செயல்பட்டு உதவி புரியும்.
வருமானமே வாழ்க்கையை உயர்த்தும்:
செலவைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தினாலும் ஒரு எல்லைக்கு மேல் செலவைக் குறைக்க முடியாது. அதற்கு பதிலாக புதிய திறன்களை கற்றுக்கொண்டு, கூடுதல் வருமான வாய்ப்புகளை தேடி, பகுதி நேர வேலை வாய்ப்புகள் மூலமாக வருமானத்தை உயர்த்துவது தான் நீண்டகால தீர்வாக இருக்கும்.
கூட்டு முயற்சி நிதி மேலாண்மை:
குடும்பத்தினருடன் உட்கார்ந்து வெளிப்படையாக அனைவரிடமும் பண விசயங்கள் பற்றி பேசாத தவறான பழக்கம் பல்வேறு நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. சிறிய தவறுகளின் கூட்டுத்தொகை தான் நிதி சிக்கல்கள் என்பதால் இதை குடும்பத்தில் உள்ளவர்களுடன் கலந்து பேசி புரிய வைத்து அவரவர் பழக்கங்களில் சிறிய மாற்றத்தை செய்தாலே எதிர்கால நிதி நிலைமையை மேம்படுத்தலாம்.
மேற்கூறிய தவறுகளை செய்யாமல் இருந்தாலே நிதி பற்றாக்குறை என்பது இல்லாத ஒன்றாகிவிடும்.