ப்ளூ சிப் பங்குகள் என்றால் என்ன ? அவற்றில் எவ்வாறு முதலீடு செய்வது?

Blue chip stocks
Blue chip stocks

நீல வில்லைப் பங்குகளைக் (Blue chip stocks) குறித்து, அதாவது ப்ளூ சிப் பங்குகளைக் குறித்து, கேள்விப்பட்டுள்ளீர்களா ? நீல வில்லைப் பங்குகள் அதிக சந்தை மதிப்புடைய பங்குகள். அவற்றின் மொத்த பங்குகளின் எண்ணிக்கையும், அவற்றின் பங்கின் விலையையும், பெருக்கினால், பங்கின் சந்தை மதிப்பு கிடைக்கும். நீல வில்லைப் பங்குகள் இவ்வாறு அதிக சந்தை மதிப்பைக் கொண்டவை.

தேசிய பங்குச் சந்தையின் அதிக சந்தை மதிப்புடைய முதல் 50 பங்குகளைக் கொண்ட குறியீடு நிப்டி 50 எனப்படும். அதனைப் போலவே, பாம்பே பங்குச் சந்தை பெரிய 30 நிறுவனங்கள் அடங்கிய குறியீடு சென்செக்ஸ் எனப்படும். இத்தகைய பெரிய பங்குகளில் முதலீடு செய்வதைக் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஏன் பெரிய நிறுவனங்களின் பங்குகள் நீல வில்லைப் பங்குகள் எனப்படுகின்றன?

போக்கர் விளையாட்டில், நீலம், மஞ்சள், ஆரஞ்சு, கருப்பு என பல்வேறு நிறங்களில் காய்கள் உண்டு. ஆனால், அதிக மதிப்பு வாய்ந்த காய்கள் நீல நிறத்திலிருக்கும். இதனைப் போலவே, பங்குச் சந்தையில் பல நூற்றுக்கணக்கான பங்குகள் இருந்தாலும், அதிக சந்தை மதிப்புடைய பங்குகள் நீல வில்லைப் பங்குகள் எனப்படுகின்றன. இந்தப் பங்குகள் பொதுவாக தங்களது துறையில் தலைசிறந்த மூன்று நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும். நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்டத் துறையில் கோலோச்சியிருக்கும். இத்தகைய பங்குகள் யானையைப் போன்றவை. இவை மெதுவாக நடந்தாலும், கீழே விழுவதற்கான வாய்ப்புகள் குறைவு.இவற்றை பெரிய மதிப்பு நிறுவனங்கள்(large cap companies) என்றும் கூறுவார்கள்.

இத்தகையப் பங்குகளில் முதலீடு செய்வதில் சில நிறை, குறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நிறைகள்:

  • ஈவுத் தொகை - இந்த நிறுவனங்கள் பொதுவாக, ஈவுத் தொகை, உபரிப் பங்கு போன்றவற்றை வழங்கும்.

  • நீண்ட காலத்தில் முதலீட்டின் வளர்ச்சி - குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நீண்ட காலத்தில் நல்லதொரு வளர்ச்சியை அடையும்.

  • அதிக நீர்ப்புத் தன்மை - பெரிய நிறுவனங்கள் என்பதால், எளிதில் விற்று, பணமாக மாற்ற முடியும்.

  • அதிகமாகத் தாங்கும் திறன் - பங்குச் சந்தையின் வீழ்ச்சிகளால் பெரிதும் பாதிக்கப்படாது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தாங்க வல்லது.

குறைகள்:

  • குறைவான வளர்ச்சி - மற்ற சிறு நிறுவனங்களைப் போல், இவை வேகமாக வளராது. இவை யானை போன்றவை. எனவே, நடை மெதுவாகத் தான் இருக்கும்.

  • பெரிய நிறுவனங்களும் வீழலாம் - ஐடியா, ரிலையன்ஸ் பவர் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட, வீழ்ச்சி அடைந்துள்ளன. எனவே, இவற்றில் ஒருமுகப்படுத்தப்பட்ட முதலீடு ஆபத்தானது.

  • அதிக விலை- இத்தகைய பங்குகள் பொதுவாக அதிக விலையிலிருக்கும். ஏனென்றால், இவற்றுக்கு பங்குச் சந்தையில் அதிக மவுசு இருக்கும்.

நீல வில்லைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

இப்பொழுது, நாம் இத்தகைய பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா என்ற கேள்வி எழலாம். இத்தகைய பெரிய நிறுவனங்களில் நீண்ட காலத்தில் முதலீடு செய்தால், நல்லதொரு பணப் பெருக்கத்தினை அடையலாம். ஈவுத் தொகை, உபரிப் பங்குகள் மூலமாக, அதிக பணத்தைப் பெறலாம். ஆனால், எந்த ஒரு பெரிய நிறுவனமும் கூட, வீழ்வதற்கு வாய்ப்புண்டு. ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதைப் போல் நிகழ வாய்ப்புண்டு. எனவே, இவற்றில் நேரடியாக முதலீடு செய்வதற்கு பதிலாக, பங்குச் சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள்(index funds) வாயிலாக முதலீடு செய்வதன் மூலம், நமது முதலீடானது பங்குச் சந்தையின் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பெரிய நிறுவனங்களில் பரவலாக முதலீடு செய்யப்படுகிறது. பங்குச் சந்தை குறியீட்டிலுள்ள ஒரு பெரிய நிறுவனம் வீழ்ந்தால், அந்த இடத்தில் மற்றொரு பெரிய நிறுவனம் குறியீட்டில் சேர்க்கப்படும். (உதாரணமாக, சமீபத்தில் யெஸ் வங்கி வீழ்ச்சி அடைந்தபோது, அங்கு ஸ்ரீ சிமெண்ட் சேர்க்கப்பட்டது.)

எனவே, தேசியப் பங்குச்சந்தையின் நிப்டி 50, பாம்பே பங்குச்சந்தையின் சென்செக்ஸ் போன்ற குறியீடுகளைச் சார்ந்த குறியீட்டுப் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது நலம். இதன் மூலம், பெரிய நிறுவனங்களில் நம்மால் பரவலாக முதலீடு செய்யமுடிகிறது. பரவலாக்கத்தின் மூலம், முதலீட்டின் நஷ்டம் குறைக்கப்படுகிறது. நீண்ட காலத்தில் நல்லதொரு பணப் பெருக்கத்தினைப் பெற முடிகிறது.

பெரிய நிறுவனங்களின் பங்குகளில் பரவலாக முதலீடு செய்து பணத்தைப் பெருக்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com