
வணிக நிதி கடன் பத்திரம் (Business Finance debenture) என்பது ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் அதற்கான நிதியை திரட்டுவதற்காக வெளியிடும் ஒரு வகையான கடன் பத்திரமாகும். இந்த கடன் பத்திரங்கள் வணிகங்களுக்கு நீண்ட கால நிதி ஆதாரத்தை வழங்குகின்றன. அத்துடன் பங்குதாரர்களின் பங்குகளை குறைக்காமல் நிதி திரட்டவும் உதவுகின்றன. இதில் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து கடன் வாங்குகின்றன. அதற்காக ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் திரும்ப செலுத்துவதாக உறுதியளிக்கும். இந்த கடன் பத்திரம் என்பது ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் கடன் ஆவணமாகும்.
கடன் பத்திரம் வழங்குவதன் நோக்கம்:
நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை விரிவு படுத்துவதற்கும், புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கும், இருக்கின்ற கடன்களை அடைப்பதற்கு நிதி திரட்டுவதற்காக கடன் பத்திரங்களை வழங்குகின்றன. அரசாங்கங்கள் பொது நிதியை திரட்ட கடன் பத்திரங்களை பயன்படுத்துகின்றன.
கடன் பத்திரங்கள் பொதுவாக ஒரு நிலையான வட்டி விகிதத்தில் (fixed interest rate) செலுத்துவதாக உறுதியளிக்கின்றன. அதாவது முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு நிலையான வட்டி விகிதத்தில் பணத்தைப் பெறுவார்கள்.
நிறுவனத்தின் நிதி நிலைமை மற்றும் கடன் வாங்கும் திறனைப் பொறுத்து முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்படும். இது ஒரு நிலையான வருமானம் ஈட்டும் கருவியாக கருதப்படுகிறது.
Convertible Debentures - சில கடன் பத்திரங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பங்கு பத்திரங்களாக மாற்றப்படும் வசதியுடன் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.
கடன் பத்திரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட முதிர்வு காலம் (maturity date) உண்டு. அதாவது கடன் பத்திரங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முதிர்ச்சி அடையும். அதன் பின்னர் அசல் தொகை திரும்ப வழங்கப்படும்.
கடன் பத்திரங்கள் பாதுகாப்பானவையா?
கடன் பத்திரங்கள் பொதுவாக பாதுகாப்பற்றவை (unsecured debt). காரணம் அவை எந்தவிதமான சொத்துக்களையும் பிணையமாக கொண்டிருப்பதில்லை. எனவே அந்த நிறுவனம் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதைப் பொறுத்து முதலீட்டாளர்கள் கடன் வழங்குகிறார்கள். இதன் மூலம் கடன் வாங்கும் நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வட்டியுடன் அசலை திருப்பித் தர ஒப்புக் கொள்கிறது.
கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது நிறுவனத்தினுடைய நிதி நிலைமையை பொறுத்தது. நிறுவனம் திவாலானால் முதலீட்டாளர்கள் பணத்தை இழக்க வேண்டி வரலாம். ஆனால் சில கடன் பத்திரங்கள் சொத்துக்களால் பாதுகாக்கப்படுகின்றன. அதாவது நிறுவனம் திவாலானால் அவற்றிற்குரிய சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்படும். இதனால் முதலீட்டாளர்கள் பணத்தை போடுவதற்கு முன்பு அந்த நிறுவனம் செக்யூர்டா(secured debenture) அல்லது அன்செக்யூர்டா(unsecured debenture) என்பதை அறிந்து செயல்படுவது நல்லது.