
இந்திய நிறுவனங்களின் தரவுகள் பாதுகாப்பாக இல்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ரூப்ரிக் ஜீரோ லேப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ரூப்ரிக் ஜீரோ லேப் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் இயங்கும் சர்வதேச நிறுவனங்களினுடைய இணைய பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி இருக்கிறது. இவ்வாறு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தாய்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படும் சர்வதேச நிறுவனம் இடம் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
ரூப்ரிக் ஜீரோ லேப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் இயங்கக்கூடிய சர்வதேச நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை தற்போது டிஜிட்டல் மையமான செயல்பாட்டையே 95% மேற்கொள்கின்றன. ஆனால் இணைய பாதுகாப்பு குறித்து பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
கடந்த 12 மாதங்களில் மட்டும் சர்வதேச நிறுவனங்களில் 50 சதவீத நிறுவனங்கள் தகவல் திருட்டு மற்றும் தரவு இழப்பு பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கின்றன. சர்வதேச நிறுவனங்களில் இரண்டில் ஒன்று தகவல் திருட்டு பிரச்சனையில் சிக்கியிருக்கின்றன.
தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து இருக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தகவல் திருட்டு பெருமளவில் அரங்கேறி வருகிறது. இதன் மூலம் நிறுவனங்கள் பொருளாதார ரீதியான சிக்கலை சந்திக்கின்றன.
மேலும் பணம் திருட்டு, தகவல் திருட்டு என்று பல்வேறு பிரச்சனைகளையும் நிறுவனங்கள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பான்மையான தொழில் நிறுவனங்கள் தரவுகளை பாதுகாக்க சரியான கொள்கையை வகுக்க முனைப்பு காட்டுவதில்லை.
குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை 49 சதவீத நிறுவனங்கள் இணைய திருட்டுக்கு உள்ளாக கூடிய சூழல் இருக்கிறது. பெரும்பான்மையான நிறுவனங்கள் தரவுகளை பாதுகாக்க சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமலும், விழிப்புணர்வு இல்லாமலும் பாதிக்கப்பட்டுள்ளன.
வரக்கூடிய காலங்களில் இந்தியாவின் நிறுவனங்கள் இணையச் அச்சுறுத்தலில் சிக்கி மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கும். மேலும் இந்த அறிக்கையை எச்சரிக்கையாக கொண்டு தரவுகளை பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.