விவோ போன் நிர்வாகிகள் கைது!
பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதாக விவோ போன் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் முன்னணி மொபைல் போன் நிறுவனமாக விளங்கி வருவது விவோ. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை ஏற்படுத்தி பல்வேறு வகையான மொபைல் போன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் 2018 முதல் 21 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி 23 நிறுவனங்கள் மூலமாக ஒரு இந்தியர்கள் உட்பட மூன்று சீனர்களுக்கு சட்ட விரோதமாக 62,476 கோடி ரூபாயை பரிவர்த்தனை செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை விவோ மற்றும் லாவா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இதில் 2018 முதல் 21 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்நிறுவனம் மொபைல் போன்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 62,476 கோடி ரூபாயை சட்ட விரோதமாக சீனாவில் உள்ள நபர்களுக்கு பரிவர்த்தனை செய்திருக்கிறது என்ற ஆதாரங்களை கைப்பற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் விவோ நிறுவனத்தின் தொடர்பு நிறுவனமான லாவா நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஹரி ஓம் ராய் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வளவு பெரிய தொகை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்யப்பட்டு இருப்பதன் மூலம் இந்தியாவினுடைய அந்நிய செலாவணி பரிவர்த்தனை மிகப் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. மேலும் மிகப் பெரும் அளவில் வரி ஏய்ப்பு நடைபெற்று இருக்கிறது என்று குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் அமலாக்கத்துறை தனி தனியே விசாரணை நடத்தி வருகிறது.