

பணம் என்ற ஒற்றை வார்த்தை இன்று உலக மக்கள் அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. பணத்தை வைத்துதான் ஒரு மனிதனின் அந்தஸ்து எடை போடப்படுகிறது. பணம் இன்றைக்கு காகிதங்களாகவும், உலோக நாணயங்களாகவும், பிளாஸ்டிக் அட்டை வடிவில் கிரெடிட் கார்டுகளாகவும் உள்ளன. பணத்தை செலாவாணி என்கிறார்கள். செலாவாணி என்பது பணப்புழக்கத்தையே குறிக்கும். வர்த்தகத்துறையின் அஸ்திவாரமே இந்த செலாவணிதான்.
நாகரீகம் வளர்ச்சியடைந்த ஆரம்பத்தில் பண்டைய காலத்தில் பொருட்களை வாங்க மக்கள் தங்களிடம் இருக்கும் விளைபொருட்களை கொடுத்து பண்டமாற்று முறையில் பொருட்களை வாங்கினர். இம் முறையில் பல இடர்ப்பாடுகள் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் பணத்தைக் கண்டுபிடித்த பெருமை 4 நாடுகளுக்கு உரியது. கி.மு 2500 ல் மெசோபடோமியா ஒரு பொருளுக்குப் பண்டமாற்று முறையாக வெள்ளிக் கட்டியை வழங்கியது. அதற்கு செக்கில்ஸ் (Shekels) என்று பெயர். இதனை தொடர்ந்து சில நாடுகளில் தங்கம் மாற்று பொருளானது அதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கெல்லாம் விடை காணும் விதமாக, கி.மு .700 ல் லிபியா நாட்டைச் சேர்ந்த மன்னன் 'கயிஜாஸ்' என்பவர் ' எலக்டிரம்' என்ற ஒரு நாணயத்தை முதல் முறையாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அது 75 சதவீதம் தங்கமும், 25 சதவீதம் வெள்ளியும் கலந்து உருவாக்கப்பட்டிருந்தது. இது கொடுக்கல்- வாங்கல் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
கிரேக்க வணிகர்கள் இதன் வசதியை உணர்ந்து அதை பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தினர். நாட்கள் செல்லச் செல்ல தங்கத்திற்கு பதிலாக செம்பு நாணயங்கள் புழக்கத்தில் வந்தது. வியாபார ரீதியாக பணப்பிரச்னைகளை நாணயங்கள் தீர்த்த போதும், அதனை பல இடங்களுக்கு தூக்கிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் காகிதத்தில் உருவான நாணயத்தை சீனர்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தினர். கி.பி 970 ம் ஆண்டில் காகித கரன்சி நோட்டுகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
பணத்தின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. லத்தீன் மொழியின்' மொனிடா' என்பதில் இருந்து ' மணி '(money) என்ற வார்த்தை தோன்றியது. அது 'ஹிப்ரு' மொழியில் எடை அல்லது நாணயங்கள் என்று பொருள்படும் 'மோன்' என்பதிலிருந்து பெறப்பட்டது. பைபிளில் அது ' மனே' என்று குறிப்பிடப்படுகிறது. 16 ம் நூற்றாண்டின் இறுதியில்தான் 'காஷ்' என்ற சொல் ஆங்கிலத்திற்குள் வந்தது. அதன் மூல பிரெஞ்சுச் சொல் 'கேஸ்ஸே'. அதன் பொருள் பணப்பெட்டி என்பதாகும்.'காஸியர்' என்பதற்கு 'பணத்தைக் கையாள்பவர்' என்று பொருள் அதிலிருந்து வந்தது தான் 'கேஷியர்' என்பது தோன்றி, பின்னர் அது சுருக்கப்பட்டு 'காஷ்' என்றானது.
நாணயமும், நம்பிக்கையின் அடிப்படையில் உலக நாடுகளில் உள்ள வங்கிகள் அளிக்கும் உறுதிமொழியின் அடிப்படையில் கரன்சி நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தது. 1661 ம் ஆண்டு ஜூலை மாதம் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் உள்ள ஒரு வங்கிதான் இன்றைக்கு நடைமுறையில் உள்ள கரன்சி நோட்டுகள் புழக்கத்துக்கு காரணம். கி.பி 1950 ம் ஆண்டு அமெரிக்காவின் 'டைனர்ஸ் கிளப் ' கிரெடிட் கார்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கியின் உறுதிமொழியின் அடிப்படையில் இந்திய கரன்சிகள் புழக்கத்திற்கு வருகிறது.
உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாணயங்கள் டாலர், யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் தான். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, தைவான், சிங்கப்பூர், கயானா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நாணயங்கள் டாலர் என்றே அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் டென்மார்க், செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, பல்கேரியா, ருமேனியா, சுவீடன், குரோசியா நாடுகளின் நாணயம் யூரோ.இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், ஜார்ஜியா, லெபனான், சூடான் அயர்லாந்து, எகிப்து நாட்டின் நாணயங்கள் பவுண்டு. ஜப்பானில் பயன்படுத்தப்படும் நாணயம் யென். ஏமன், ஈரானின் நாணயங்கள் ரியால். பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, கியூபா போன்ற நாடுகளின் நாணயம் பிசோ.
சர்வதேச செலாவணி சந்தையில் அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்டு மற்றும் யூரோ போன்றவை ஆதிக்கம் செலுத்தினாலும், பல ஆண்டுகளாக உலகின் மிகவும் மதிப்புமிக்க நாணயமாக குவைத் தினார் (Kuwaiti Dinar - KWD) திகழ்கிறது. குவைத் தினார் 1961-இல் அறிமுகப் படுத்தப்பட்டது. அமெரிக்க டாலரை விடவும் சுமார் 3 மடங்கு அதிக மதிப்புள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, ஒரு குவைத் தினாரின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 307 ரூபாய் ஆகும். தற்போதைய நிலவரப்படி (2025-2026), ஈரானிய ரியால் (Iranian Rial - IRR) உலகின் மிகக் குறைந்த மதிப்புள்ள நாணயமாகக் கருதப்படுகிறது. 1 இந்திய ரூபாய்க்கு: சுமார் 12,000 - 14,000+ ஈரானிய ரியால்கள் வரை (சந்தை நிலவரப்படி) மதிப்பு சரிந்துள்ளது.
நாணயங்களின் விலைகள் தினமும் ஏற்ற இறக்கமாகின்றன. இந்தியாவில் நமக்கு தெரிந்த இந்திய ரூபாயும் அமெரிக்க டாலரும்தான். உலகம் முழுவதும் இதுபோல பல வகையான நாணயங்கள் இருக்கின்றன. சில சமயங்களில் டாலர் மதிப்பு வலுப்பெறுகிறது. சில சமயங்களில் ரூபாய் மதிப்பு பலவீனமாகிறது. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பரவலாக்கப்பட்ட சந்தையான அந்நிய செலாவணி சந்தையில்தான் நாணயங்களின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.