ஒரு சராசரி நபரின் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும்?

ஒரு சராசரி நபரின் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும்?

ரு சராசரி நபரின் தனிப்பட்ட சேமிப்பு கணக்கில் அவரது அவசரகால நிதி இருக்கவேண்டும். மேலும், ஒரு மாதத்திற்கு தேவையான பணம் இருக்க வேண்டும். இதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

அவசரகால நிதி அளவு- அவசர கால நிதியைக் குறைந்தபட்சம் மூன்று மாதத்தில் இருந்து அதிகபட்சமாக ஒரு வருடத் தேவைக்கான பணமாக கூட இருக்கலாம். அவசரகால நிதியானது அவசரத் தேவைக்காக மட்டுமே உபயோகப் படுத்தப் படவேண்டும்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரின் திடீர் வேலை இழப்பு, ஏதாவது ஒரு உறுப்பினரின் திடீர் உடல் நலமின்மை, வீட்டில் திடீர் மராமத்து செலவுகள் அல்லது வீட்டின் வாகனத்தின் திடீர் பழுது போன்ற எந்த ஓர் அவசரத் தேவைக்கும் பிறரிடம் கையேந்தாமல் நாம் சமாளிக்க அவசரகால நிதி உதவும்.

உபயோகப்படுத்திய உடன் எவ்வளவு சீக்கிரம் மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியுமா கொண்டு வர வேண்டும். இந்த அவசர கால நிதியானது எப்பொழுதும் எளிதாக எடுக்குமாறு வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்க வேண்டும்.

ஏதேனும் முதலீட்டில் இருந்தாலும் உடனடியாக பணம் ஆக மாற்றுவது என்பது கடினம். எந்த ஒரு முதலீட்டிலும் நீர்ப்புத் தன்மை (liquidity) வேறுபடும். வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் பொழுது உடனே அதை எடுத்து அவசர தேவைக்கு உபயோகப் படுத்த இயலும்.

உதாரணமாக ஒருவரின் மாத தேவையை ரூபாய் 30,000 என்று கணக்கில் கொண்டால், அவசர கால நிதியை ஆறு மாதத்திற்கு அவர் வைத்திருப்பார் என்று கணக்கில் கொண்டால் 1,80,000 ரூபாய் அவர் அவசரகால நிதியாக வைத்திருந்தால் போதுமானது.

மாதாந்திர தேவைக்கான பணம்- ஒரு மாதம் முழுவதும் வரவு செலவு கணக்கு எழுதி நமக்கு அந்த மாதம் ஆகும் செலவை கணக்கிட வேண்டும். இது நிதி திட்டமிடலுக்கு(budget) உதவும்.

சேமிப்புக் கணக்கில் அவசரகால நிதிக்கு மேலாக, அந்த மாதத்தில் நமக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கும் என்று நாம் முன்கூட்டியே திட்டமிட்டு இருப்போமோ(budget) அவ்வளவு பணம் வைத்திருந்தால் போதும்.

நமது உதாரணத்தின் படி அவருக்கு மாதத்தில் தேவைப்படும் பணம் ரூபாய் 30,000. 1,80,000(அவசரகால நிதி)+ 30,000(மாதாந்திர செலவுக்கான நிதி) = 2,10,000/—

எனவே அவரது சேமிப்புக் கணக்கில் ரூபாய் 2,10,000 போதுமானது. ஏதேனும் காரணத்தால் செலவு கூடி, அவர் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்து, அவசர கால நிதியை தொடாமல் அந்த மாதத்தை கடக்க விரும்பினால், 30,000துடன் சேர்ந்து கொஞ்சம் 5,000 அல்லது 10,000 ரூபாய் வைத்துக் கொள்ளலாம். அவருடைய நிதி திட்டமிடல் மிகவும் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இது கூட அவசியமில்லை.

2,10,000 + 10,000 (முன்ஜாக்கிரதை முத்தண்ணா உபரி மாதாந்திர பணம்) =2,20,000 சேமிப்புக் கணக்கில் இதற்கு மேலாக, நமது உதாரணத்தின் படி ,அதிகமாக வைத்திருப்பது என்பது அவசியமல்ல. இதற்கு மேலாக அவர் சேமிக்கும் பணத்தை பல்வேறு விதங்களில் முதலீடு செய்து அவற்றைப் பெருக்க பார்க்க வேண்டும்.

சேமிப்பு கணக்கில் வட்டி விகிதம் குறைவு. அவசரகால தேவை நிதி மற்றும் தற்போதைய மாதத்தின் நிதி மட்டும் அதில் போதுமானது.சேமிப்புக் கணக்கு அவசியத்திற்காக மட்டும் உபயோகப் படுத்தவோம். மீதி பணத்தை முதலீடு செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com