

2025- 26 நிதியாண்டின் பொருளாதார அறிக்கையின் படி, இந்தியாவில் விவசாயத் துறையின் பொருளாதார வளர்ச்சி 4.6% ஆக இருக்கிறது. விவசாயம் இந்தளவிற்கு வளர்ச்சி பெற பயிர்களை விட, கால்நடைகள் மற்றும் மீன்வளம் முக்கிய பங்காற்றியுள்ளது. இது 2025 நிதியாண்டு காலத்தில் பதிவான 2.7% வளர்ச்சியை விட அதிகமாகும்.
விவசாயத் துறை பொருளாதாரம் 2015-16 முதல் 2024-25 வரையிலான பத்தாண்டு காலத்தில் மிகவும் வலிமை வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. இதன் ஆண்டு வளர்ச்சி விகிதம் 4.45% ஆக இருந்தது. இந்த வளர்ச்சி 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. இந்த வளர்ச்சி பெரும்பாலும் பயிர் சார்ந்த விளைச்சலில் ஏற்படும் முன்னேறங்களுக்கு பதிலாக, பண்ணைசார் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக நிகழ்ந்துள்ளது.
பண்ணை சார்ந்த கால்நடைகள் 7.1%, மீன்வளம் 8.8% பங்களிக்க, இவற்றின் நிலையான வளர்ச்சி விவசாயத் துறையை தூக்கி நிறுத்தியுள்ளது. அதே நேரம் பயிர் உற்பத்தி துறை நிலையானதாக இல்லை.
கடந்த பத்தாண்டுகளில் பயிர் வளர்ச்சி 3.5% அளவிலேயே இருந்துள்ளது. இது நிலையாக வளர்ச்சியடைந்து மேல் நோக்கி செல்ல தவறியது. பயிர் துறையின் பெரிய முன்னேற்றம் இல்லாத தன்மைக்கு, இங்குள்ள கட்டமைப்பு சிக்கல்களே காரணமாகிறது. மேலும் வானிலை மாற்றங்கள் ஒரு காரணமாகவும் இருக்கின்றன.
கால்நடைகள் மற்றும் மீன்வளம், ஒப்பீட்டளவில் நிலையான விகிதத்தில் சுமார் 5-6% வளர்ந்துள்ளன. பயிர் விவசாயத்தில் உள்ள சிரமங்களை ஈடுசெய்ய, விவசாயிகள் கால்நடைகள் மற்றும் மீன்களையே பெரிதும் நம்பியுள்ளனர். விவசாயம் மற்றும் பண்ணை சேர்ந்த கூட்டு நடவடிக்கைகள், விவசாயிகளை இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்ளாமல் தாங்கிப் பிடிக்கிறது.
இதன் காரணமாக கால்நடைகள் மற்றும் மீன் வளர்ப்பில் சிரமம் எதுவும் இல்லை என்று கூறிவிட முடியாது. இங்கும் தொடர்ச்சியான தீவனப் பற்றாக்குறை காரணமாக சவால் மிகுந்ததாக உள்ளது. பால் உற்பத்திச் செலவில் தீவனம் மற்றும் உணவுப் பொருட்கள் 70% அதிகமாக உள்ளது. மேலும் கால்நடை வளர்ச்சி உள்ள அளவிற்கு தீவன உற்பத்தி இருப்பதில்லை. தீவனப் பயிர்களின் விவசாயப் பரப்பளவு சுமார் 9.13 மில்லியன் ஹெக்டேராக உள்ளது. இது மொத்த விவசாயப் பயிர் பரப்பளவில் 4.61% மட்டுமே.
இந்நிலையில் 2015–2024 நிதியாண்டுகளில் கால்நடைத் துறை சிறப்பான முன்னேற்றத்தை பதிவு செய்தது. அதன் மொத்த மதிப்பு சுமார் 195% அதிகரித்து, தற்போதைய விலையில் 12.77 % வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. இதே வருடங்களில் மீன் உற்பத்தியும் ஓட்டு மொத்தமாக 140% வளர்ச்சியை (88.14 லட்சம் டன்) பதிவு செய்துள்ளது. விக்ஷித் பாரத் இலக்கை அடைவதற்கு விவசாயம் மையமாக இருக்கும் என்று தரவுகள் கூறுகின்றன.
கால்நடைகள் மற்றும் மீன்வளம் ஆகியவை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்களிப்பாளராகவும், வளர்ச்சி எந்திரங்களாகவும் இருப்பதாக தரவு காட்டுகிறது. வேளாண் மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) சுமார் 33% பங்களிப்பை தோட்டக்கலைத் துறை வழங்கியுள்ளது. இது தொடர்புடைய செயல்முறைகள் நாட்டின் விவசாய வளர்ச்சிப் பாதையில் ஒளிமயமான இடத்தை உருவாக்கியுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில், தோட்டக்கலை உற்பத்தி 362.08 மெட்ரிக் டன்களை எட்டியது; இது மதிப்பிடப்பட்ட உணவு தானிய உற்பத்தியான அளவான 329.68 MT ஐ விட அதிகமாகும்.