இந்திய ரூபாயின் மதிப்பு உலக அரங்கில் வலுவானதாக இருக்கிறது என்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா குளோபல் ஃபார்ம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்து கொண்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது, இந்தியா சர்வதேச அரங்கில் வலுவான பொருளாதாரம் என்ற நிலையை பெற்றிருக்கிறது. அதேசமயம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மாதங்களில் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி கண்டதையும் ரிசர்வ் வங்கியும், இந்திய அரசும் உற்று நோக்கி இருகின்றன. அவை சிறுக சிறுக சரி செய்யப்பட்டு வருகிறது. இந்திய ரூபாயினுடைய மதிப்பை உயர்த்த அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலும் உலக அரங்கில் இந்திய ரூபாயினுடைய மதிப்பு வலுவானதாக இருக்கிறது.
சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கக் கூடிய பண வீக்கம் இந்தியாவில் வட்டி உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அதனால் இந்தியாவை நோக்கி வரும் முதலீடுகள் குறைகின்றன. அதே சமயம் நிலையான கொள்கை, அதிக அளவிலான நுகர்வுத் தன்மை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் பொருளாதாரம் நிலையான தன்மையை அடைந்திருக்கிறது.
உலக நாடுகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய பொருளாதார பதற்றம், நுகர்வு குறைவு போன்ற பிரச்னைகள் இந்திய பொருளாதாரத்திலும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. ஆனாலும், அவை இந்தியாவினுடைய மொத்த உள்நாட்டு பொருளாதார நிலையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய நிதி அமைச்சகம் நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம் இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் 6.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.