

விவசாயம் என்பது நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால், விதைப்பதில் இருந்து அறுவடை வரை ஒரு விவசாயி சந்திக்கும் மிகப்பெரிய சவால் மூலதனம். அவசரத் தேவைகளுக்காக கந்துவட்டிக்குக் கடன் வாங்கி, அந்த வட்டிச் சுழலில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்வதுதான் கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம்.
வெறும் பயிர்க்கடன் மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலுக்கும் கைகொடுக்கும் இந்த மேஜிக் கார்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 1998-ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விவசாயி களுக்குத் தேவையான கடன் வசதியை எளிதாகவும், விரைவாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆரம்பத்தில் பயிர் சாகுபடிக்கு மட்டுமே வழங்கப்பட்ட இக்கடன், தற்போது கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கிசான் கிரெடிட் கார்டு விவசாயிகளுக்கு எவ்வாறு உதவுகிறது?
விவசாயிகள் தங்கள் சாகுபடிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள இத்திட்டம் பல்வேறு வழிகளில் உதவுகிறது.
பொதுவாக இக்கடனுக்கான வட்டி 7% ஆகும். ஆனால், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 3% வட்டி மானியம் வழங்கப் படுகிறது. இதனால், நிகர வட்டி 4% ஆக மட்டுமே இருக்கும்.
விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்குதல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செலவுகளுக்கு இக்கடன் பெரிதும் உதவுகிறது.
தற்போது ரூ. 2 லட்சம் வரை கடன் பெற எந்தவித சொத்து பிணையமும் தேவையில்லை என்று விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன.
கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து காப்பீட்டு வசதியும் வழங்கப்படுகிறது.
கிசான் கிரெடிட் கார்டு குறித்த புதிய அப்டேட்:
முந்தைய பட்ஜெட் அறிவிப்புகளின்படி, கடன் வரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
குறுகிய காலப் பயிர்களுக்கு 12 மாதங்கள் என்றும், நீண்ட காலப் பயிர்களுக்கு 18 மாதங்கள் என்றும் கடன் சுழற்சி காலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடன் வழங்கும் முறையை விரைவுபடுத்த டிஜிட்டல் தளங்கள் மூலம் விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது கிராமப்புற வங்கிகளை அணுகலாம்.
வங்கியில் வழங்கப்படும் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட 3-4 வேலை நாட்களில் கடன் அனுமதி வழங்கப்படும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பினால், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் KCC Apply என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
இத்திட்டம் விவசாயிகளின் அவசர பணத்தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களை நிதி ரீதியாகப் பாதுகாக்கவும் உதவுகிறது.