

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) என்பது இந்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய வீட்டுவசதி திட்டம் ஆகும். இத்திட்டம் கிராமப்புறங்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) மற்றும் நகர்ப்புறங்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (PMAY-U) என இரு பிரிவுகளாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் மூலம் இந்தியாவில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள், குறைந்த வட்டியில் கடனுதவி அல்லது அரசு மானியம் மூலம் புதிய வீடு பெறலாம்.
1) இத்திட்டத்தின் முக்கிய பிரிவுகள் மற்றும் பலன்கள்:
*பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா- கிராமின்(PMAY-G):
கிராமப்புறங்களில் சொந்த வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க நிதி உதவி வழங்கப்படுகிறது. தகுதியான கிராமப்புற ஏழைகளுக்கு வீடுகள் கட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவி வழங்கப்படுகிறது.
*பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் (PMAY-U):
பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் (EWS), குறைந்த வருவாய் பிரிவினர்(LIG) மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் (MIG) ஆகியோருக்கு கடன் மானியம் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
*வட்டி மானியம்:
புதிய வீடு வாங்குவதற்கோ அல்லது கட்டுவதற்கோ வாங்கும் வீட்டுக் கடன்களுக்கு PMAY மூலமாக வட்டி மானியம்(Credit Linked Subsidy) வழங்கப்படுகிறது.
*பெண் உறுப்பினர்களின் அதிகாரம் (Women Empowerment):
நகர்ப்புறத் திட்டங்களின் கீழ், விண்ணப்பிக்கும் குடும்பத்தின் பெண் தலைவி பெயரிலோ அல்லது இணை உரிமையாளராகவோ கட்டாயம் இருக்கவேண்டும்.
2) முக்கிய தகுதிகள்:
*விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இந்தியாவில் எந்த பகுதியிலும் சொந்தமாக வீடு இருக்கக் கூடாது.
*குடும்பத்தின் ஆண்டு வருமானத்தைப் பொறுத்து விண்ணப்பதாரர்கள் பிரிக்கப்படுகின்றனர். ரூ. 3 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவிலும்(EWS), ரூ. 3 லட்சம் முதல் 6 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் இருப்பவர்கள் குறைந்த வருவாய் பிரிவிலும்(LIG), ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவிலும்(MIG) சேர்க்கப்படுகின்றனர்.
*விதவைகள், திருநங்கைகள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், SC/ST மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இத்திட்டத்தில் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
3) விண்ணப்பிக்கும் முறை:
*கிராமப்புற பயனாளிகள்:
கிராமப்புற ஊராட்சி அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை(DRDA) வாயிலாக கிராமப்புற பயனாளிகள் அணுகலாம். கிராம நிர்வாக அலுவலர் அல்லது பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகி, பயனாளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்து பதிவுகளை மேற்கொள்ளலாம்.
*நகர்ப்புற பயனாளிகள்:
தகுந்த ஆவணங்களுடன் PMAY-HFA வலைதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் 'Citizen Assessment' என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும். அல்லது உங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகியும் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அதாவது அதிகார பூர்வ இணையதளம் மூலம் நேரடியாகவோ அல்லது அருகில் உள்ள பொது சேவை மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் வங்கிகள் மூலம் வாங்கும் வீட்டுக் கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. சொந்தமாக வீடு கட்ட அரசு சார்பில் நேரடி நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
4) தேவையான முக்கிய ஆவணங்கள்:
ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை.
உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட ஆண்டு வருமானச் சான்று.
வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் (IFSC குறியீடு மற்றும் கணக்கு விவரங்களுடன்) சொந்த வீடு இல்லை என்பதற்கான உறுதிமொழி (Affidavit).
இக்கட்டுரையின் வாயிலாக, வாடகை வீட்டு வாழ்க்கையிலிருந்து விடுபட்டு உங்களுக்கான சொந்த வீட்டை மிகக் குறைந்த செலவிலும், அரசு மானியத்துடனும் உருவாக்குவதற்கான தெளிவான பாதையை நீங்கள் கண்டடைவீர்கள். எந்தவொரு இடைத்தரகரும் இன்றி, அரசாங்கத்தின் சலுகைகளை நேரடியாகப் பெற்று உங்கள் குடும்பத்தின் தலைமுறை கனவை பாதுகாப்பான முறையில் நிஜமாக்கிக்கொள்ள முடியும்.
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: Pradhan Mantri Awas Yojana