2014 - 15 நிதியாண்டு முதல் 2022 -23 நிதியாண்டு வரை பொதுத்துறை வங்கிகள் 10. 42 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் நீண்ட ஆண்டு காலமாக இருப்பில் உள்ள கடன்களையும், வசூலிக்க இயலாத கடன்களையும் தள்ளுபடி செய்திருக்கிறது. அதே சமயம் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் அவற்றை வசூலிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தீவிர முயற்சியில் இறங்குவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2014 - 15 நிதியாண்டு முதல் 2022 - 23 நிதி ஆண்டு வரை 10. 42 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கின்றன. இவை வங்கிகளுக்கு மிகப்பெரிய லாப இழப்பு செயல்பாடாக இருந்தாலும், பல்வேறு விதமான வசூலிப்பு நடவடிக்கைகளில் மூலமும் கடன் தொகையை வசூலிக்க முடியாத காரணத்தால் அவை தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் இதுபோன்ற தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் 1.61 லட்சம் கோடி ரூபாய் தொடர் முயற்சிகளின் மூலம் திருப்பி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால் நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இவ்வாறு 2023 - 24-ம் நிதியாண்டில் நீதிமன்றத்தில் 6,815 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஒன்றிய இணையமைச்சர் பகவத் காரத் எழுத்து பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
மேலும் பொதுத்துறை வங்கிகள் கடனை தள்ளுபடி செய்ய ஆர்பிஐ - யிடம் இருந்து போதிய உத்தரவை பெற்று இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.