50+ வயதினருக்கான பினான்சியல் பிளானிங்: சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?

retirement-investment-tips
retirement-investment-tips
Updated on

50+ என்பது ஓய்வுக்காலத்தை (retirement)  நெருங்கும் மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த வயதில் சம்பாதிப்பதைவிட சேமித்த பணத்தைப் பாதுகாப்பதும், அதை முறையாக முதலீடு செய்வதும் அவசியம். 60 வயதை நெருங்கும் சமயம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய முக்கிய நிதி சார்ந்த விஷயங்களைப் பார்ப்போமா!

அவசரகால நிதியை (emergency fund) உருவாக்குவது: 

திடீர் மருத்துவச் செலவுகள் அல்லது வேலையில்லாத காலத்தை சமாளிக்க குறைந்தது 6 முதல் 12 மாத கால குடும்பச் செலவுக்கு தேவையான தொகையை சேமிப்பு கணக்கு அல்லது லிக்விட் ஃபண்டுகளில் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள் (SCSS): 

60 வயதிற்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்திற்கு போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) அல்லது பி.பி.எஃப் (PPF) போன்ற அரசு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

முதலீடுகளை பன்முகப்படுத்துதல் (Asset Allocation):

அதிக ஆபத்துள்ள ஈக்விட்டி முதலீடுகளைக் குறைத்து, பாதுகாப்பான கடன் பத்திரங்கள், நிலையான வருமானத் திட்டங்கள் மற்றும் ஈக்விட்டி கலந்த கலப்பு நிதிகளில் (Hybrid Funds) முதலீடு செய்வது முக்கியம்.

கடன்களை முற்றிலும் அடைப்பது (Debt- free life): 

60 வயதில் ஓய்வு பெறுவதற்கு முன்பு வீட்டுக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகள் என அனைத்தையும் அடைத்து விடுவது கடன் இல்லாத வாழ்க்கையை உறுதி செய்வதுடன், மன அமைதியையும் மனநலத்தையும் பெற உதவும்.

மருத்துவ காப்பீடு (Health Insurance):

வயது அதிகரிக்கும் பொழுது மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். எனவே உங்களுக்கும் உங்கள் துணைக்கும் முறையான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். ஏற்கனவே பாலிசி இருந்தால் கவரேஜ் தொகையை உயர்த்துவது பற்றி சிந்திக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல் விலை உயர்வால் பட்ஜெட் துண்டா.. பணத்தை இரட்டிப்பாக்கும் 5 சூப்பர் சேமிப்பு திட்டங்கள்!
retirement-investment-tips

ஓய்வூதியத் திட்டம்:

சேமிப்பிலிருந்து மாதாந்திர வருமானம் கிடைக்கும் வகையில் Annuity திட்டங்கள் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் (FD) போன்ற திட்டங்களில் முதலீடு செய்து பணப்புழக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

பணவீக்கத்தை கருத்தில் கொள்வது (Inflation):

விலைவாசி உயர்வை மனதில் கொண்டு, நம் ஓய்வூதிய நிதி நீண்ட காலத்திற்குத் தேவையான பணத்தை வழங்குமா என்பதை ஆராய்ந்து முதலீடு செய்யவேண்டும்.

உயில் மற்றும் நாமினேஷன்:

சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை நம் வாரிசுகளுக்கு எந்தவித சிக்கலும் இன்றி பிரித்து வழங்க உயில் எழுதி வைப்பது அவசியம். அதேபோல் வங்கிக் கணக்குகள், முதலீடுகள், காப்பீட்டு பாலிசிகள் அனைத்திலும் நம்முடைய வாரிசுதாரர் (நாமினி) பெயர் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

கூடுதல் வருமானம்: 

சொந்த வீடு இருந்தால் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும். உடல் ஒத்துழைத்தால் ஓய்வு நேரத்தில் சிறு தொழில் அல்லது பகுதி நேர வேலை மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட திட்டமிடலாம்.

இதையும் படியுங்கள்:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ஏன் குறியீட்டு நிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
retirement-investment-tips

முக்கியமாக நிதி முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என்பதால் முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். ஓய்வு காலத்தை நெருங்கும் நேரத்தில் சம்பாதிப்பதைவிட சேமித்த பணத்தை பாதுகாப்பதும், அதை முறையாக முதலீடு செய்வதும் அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com