
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் முறை முழுமையாக மாறியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் வரையில், வெளியில் செல்லும் போது கையில் பணம் வைத்திருப்பது அவசியமாக இருந்தது. ஆனால் தற்போது யூபிஐ பரிவர்த்தனை அதிகரித்த பிறகு, கையில் பணம் எடுத்துச் செல்வது என்பது பலருக்கும் பழமையாகிவிட்டது.
சாதாரண டீ கடையிலிருந்து நகைக் கடை வரை, நம்முடைய தினசரி செலவுகள் அனைத்தும் ஒரு மொபைல் போனில் எளிதில் முடிகின்றன. இந்த யூபிஐ வசதியின் மூலம் கண் இமைக்கும் நேரத்தில் பணத்தை ஒருவர் மற்றொருவருக்கு அனுப்ப முடிகின்றது.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த யூபிஐ சேவையில் ரூ.2000க்கு மேலான யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் சமீப காலமாக தீயாக பரவி வருகிறது. இந்த செய்தியால் தினசரி பரிவர்த்தனைகளை யூபிஐ மூலமாக மேற்கொள்ளும் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பதட்டமடைந்துள்ளனர்.
இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC), மத்திய அரசின் தகவல் பகிரும் சமூக வலைதளக் பக்கம் மூலமாக, "ரூ.2000க்கு மேல் செலுத்தப்படும் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான ஜிஎஸ்டி கட்டணமும் விதிக்கப்படவில்லை. இது முற்றிலும் பொய்யான, ஆதாரமற்ற செய்தி ஆகும். மேலும், தற்போது யூபிஐ பரிவர்த்தனைகளில் எந்தவிதமான ஜிஎஸ்டி திட்டமும் அரசிடம் இல்லை" என தெளிவாக அறிவித்துள்ளது.
பொதுவாக, வணிக பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் எம்டிஆர் (Merchant Discount Rate) எனப்படும் கட்டணம் மட்டுமே ஜிஎஸ்டிக்கு பொருந்தும். ஆனால் ஜனவரி 2020ல் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, பெர்சன்-டூ-மெர்சன்ட் (P2M) வகை யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு யூபிஐ பரிவர்த்தனைக்கும் எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதால் ஜிஎஸ்டி வரிக்கும் தேவை ஏற்படுவதில்லை.
அதனால், சமூக ஊடகங்களில் பரவும் 'ரூ.2000க்கு மேலான யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்' என்ற செய்தி ஒரு பொய்யான வதந்தி ஆகும். எனவே இதைப் பற்றி பயனாளர்களும், சிறு வணிகர்களும் அச்சப்படத் தேவையில்லை. யூபிஐ பரிவர்த்தனைகள் இன்னும் பலருக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைந்து வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.