உலகத் தனிநபர் சொத்து அறிக்கை 2023 நமக்கு தரும் 7 பாடங்கள்!

USB GLOBAL WEALTH REPORT 2023
USB GLOBAL WEALTH REPORT 2023www.2luxury2.com

லகின் தனிநபர் சொத்து பற்றிய ஒரு அறிக்கையை சுவிட்சர்லாந்தின் யூபிஎஸ் வங்கியும், கிரெடிட் ஸூசி வங்கியும் இணைந்து இந்த வருடம் வெளியிட்டுள்ளன. இது இந்த அறிக்கையின் 14 ஆவது பதிப்பு. 540 கோடி மக்களின் பணத்தைப் பற்றிய ஓர் அறிக்கை இது.இதிலிருந்து 7 தரவுகளையும் அவை கற்றுத் தரும் பாடங்களையும் பார்ப்போம்.

1. தரவு: உலகளாவிய மக்களது தனிநபர் சொத்து மதிப்பு, 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாகக் குறைந்துள்ளது; தனிநபர்களின் சொத்து 11.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளது. கோவிட் காரணமாக, அதிகமாக சேமித்த மக்கள் இப்போது அதிகமாக செலவழித்துள்ளனர். மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு கூட்டல் காரணமாக மக்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

பாடம்: நாம் சேமிக்கும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நமது முதலீடுகளில் பரவலாக இருந்து, அந்த முதலீட்டு நிறுவனங்கள் அமெரிக்கா, ஐரோப்பா என பல்வேறு நாடுகளில் முதலீடு செய்தால், அமெரிக்க டாலரின் மதிப்பு கூட்டலால், நமது முதலீடும் அதிகரிக்கும்.

2. தரவு: பங்குகள் போன்ற நிதிகளின் சொத்துகளின் மதிப்பு கடந்த ஆண்டில் குறைந்துள்ளது. ஆனால், நிதி சாராத சொத்துக்களான நிலம் போன்றவை பாதிக்கப்படவில்லை.

பாடம் முதலீட்டுக் கலவையின் பரவலாக்கத்தின் முக்கியத்துவத்தினை நாம் அறியமுடிகிறது. முதலீட்டில் தங்கம், நிலம் போன்ற பரவலாக்கத்தினை நாம் கொள்ள வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

3. தரவு: வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பணக்கார கண்டங்களில் பணத்தின் இழப்பு அதிகரித்துள்ளது. ஆசியாவில் பணத்தின் இழப்பு குறைவாக உள்ளது. தென்அமெரிக்காவில் பணத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதிகமாக பணத்தை இழந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், சீனா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளன. அதிகமாக பணத்தை வளர்த்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, மெக்ஸிகோ, இந்தியா மற்றும் பிரேசில் உள்ளன.

பாடம்: பணக்கார நாடாக இருந்தாலும், நாம் பணத்தைக் கையாளும் அடிப்படையில் தான், நாம் பணக்காரராவது உள்ளது என்பது தெளிவாகிறது. வளர்ந்து வரும் நாடுகளில், அதிகமாக பணத்தை பெருக்குவதும் தெளிவாகிறது.

4. தரவு: தனிநபர் சொத்து மதிப்பிழப்பில், நடுத்தர வயது மக்களும், இளைய தலைமுறையினரும் உள்ளனர்.

பாடம்: எந்த வயதினராக இருந்தாலும், பணத்தை கையாள்வதில் எப்போதும் கவனம் அவசியம்.

5.தரவு: சொத்தின் பரவலாக்கம் அதிகரித்துள்ளது. உலகத்தின் உச்சத்திலுள்ள 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு, உலகின் சொத்து மதிப்பில் 44.5% என குறைந்துள்ளது.

பாடம்: நடுத்தர குடும்பத்து மனிதர்களும் , ஏழைகளும் கூட, முதலீட்டின் மூலம் பணக்காரர் ஆக முடியும். உலகின் சொத்தில் கணிசமான அளவு பெற முடியும்.

6.தரவு: அமெரிக்க கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 35 இலட்சம் குறைந்து 5 கோடியே 40 இலட்சமாக ஆகிவிட்டது. பணவீக்கத்தினை கருத்தில் கொண்டால், இது இன்னும் 44 இலட்சம் குறையும்.

பாடம்: கோடீஸ்வரர்கள் கவனமின்றி இருந்தால், கோடீஸ்வரர்களாக நீடிக்க முடியாது. மேலும், பணவீக்கத்தின் காரணமாக, கோடீஸ்வரர்கள் தங்களது கோடீஸ்வரர் பதவியை இழக்க நேரலாம். பணவீக்கத்தினைத் தாண்டி வளரும் முதலீட்டின் மூலமே, பணவீக்கத்தினை வெல்ல முடியும் , தொடர்ந்து கோடீஸ்வரர்களாக நீடிக்க முடியும் என்பது தெளிவாகிறது.

7.தரவு: உலகின் தனிநபர் சொத்து மதிப்பு 38% எதிர்காலத்தில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடுத்தர சம்பாத்திய நாடுகள் இதற்கு பெரிய அளவில் உதவும்.

பாடம்: இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், தனி நபர் சொத்து மதிப்பு எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. நாம் பங்குச்சந்தை போன்ற பணத்தைப் பெருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மொத்தத்தில், எந்த நாட்டிலிருந்தாலும், பரவலாக முதலீடு செய்து, பணவீக்கத்தினைத் தாண்டி பணத்தை பெருக்குவதன் மூலமே, நம்மால் பணக்காரர் ஆக முடியும். தொடர்ந்து பணக்காரராக நீடிக்க முடியும் என்பது உலக பண அறிக்கையின் மூலம் தெளிவாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com