

வங்கிகளில் கடன் வாங்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மிக எளிதாக வங்கிகளில் கடன் வாங்க சிபில் (Cibil Score) ஸ்கோர் மிகவும் உதவி செய்து வந்தது. சிபில் ஸ்கோர் 750 க்கு மேல் இருந்தால் உடனடியாக வங்கியில் கடன் வாங்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால் தற்போது சிபில் ஸ்கோரை மட்டும் வைத்து வங்கிகள் கடனை வழங்குவதில்லை.
தற்போது தலைகீழாக மாறியுள்ள இந்த நிலையால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் வங்கிகள் சிபில் ஸ்கோரை மட்டும் வைத்து கடன் வழங்காததன் காரணம் குறித்து விரிவாக இப்பதிவில் காண்போம்.
விண்ணப்பிக்கும் நபரின் ப்ரோபைல் மிக முக்கியம்
ஒரு நபருக்கு கடன் வழங்க வங்கிகள் அவருடைய சிபில் ஸ்கோரை பிரதானமாக கவனித்து அதனை வைத்து கடன் வழங்கி வந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் ப்ரோபைலையும் மதிப்பிட்டு வங்கிகள் கடன் வழங்கி வருகிறது.
அதிலும் கடன் பெற விண்ணப்பிக்கும் நபர் இதுவரை பெற்றிருக்கும் கடனின் அளவுகள், அவர் பணியாற்றும் பணியின் வரலாறு, கடன் வகைகள் மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றை அடிப்படையாக வைத்து கடன் வழங்கி வருகின்றன.
உங்கள் வங்கி கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட முதன்மை காரணங்கள்:
* ஒரு வங்கி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபரின் நிலையான வருமானத்தை பார்க்கிறது. விண்ணப்பிக்கும் நபருக்கு சிபில் ஸ்கோர் 750 க்கும் மேல் இருந்தாலும் சீரான வருமானம் இல்லை என்று தெரிந்தால் அதுவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமைந்து விடுகிறது. ஏனெனில் சீரற்ற வருமானம் இல்லாதவரால் கடன் தொகையை திரும்ப செலுத்துவது கேள்விக்குறியாகிவிடும் என்பதால் நிலையான வருமானத்தை வங்கிகள் பார்த்து கடன் வழங்குகின்றன.
* கடன் பெற விண்ணப்பிப்பவர் தன்னுடைய வருமானத்தில் 40 முதல் 50 சதவிகிதம் வரை மாத தவணையாக செலுத்துபவராக இருந்தால் அவருக்கு வங்கிகள் கடன் வழங்க வாய்ப்பு குறைவு. ஏனெனில் அவர் வங்கிகள் கடனை சார்ந்து இருப்பவராக கருதுவதால் வருமானத்தில் பாதிக்கும் மேல் மாத தவணை செலுத்துபவருடைய விண்ணப்பத்தை நிராகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
* கடன் பெற விண்ணப்பிக்கும் நபர் நிலையற்ற வேலையிலோ அல்லது அடிக்கடி பணி மாறுதல் பெற்றிருந்தாலோ அவருடைய விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிக்கும்.
* சுயதொழில் செய்து கொண்டு நிலையான வருமான சான்று இல்லாமல் இருக்கும் விண்ணப்பதாரரின் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிக்கும்.
* வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் தீர்க்கப்படாத கடன், சிபில் அறிக்கையில் உள்ள தவறான தனிப்பட்ட விவரங்கள் இருந்தால் இவை முக்கிய காரணங்களாக அமைந்து விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்கும்.
ஆகவே மேற்கூறிய காரணங்களை மனதில் கொண்டு வங்கிக்கு விண்ணப்பங்களை முறையாக அளித்தால் கடன் பெறுவது எளிதாக இருக்கும்.
வங்கி நிர்வாகங்களின் தற்போதைய புதிய கடன் மதிப்பீட்டு முறைகளைப் புரிந்துகொண்டு, தேவையற்ற விண்ணப்ப நிராகரிப்புகளைத் தவிர்த்து, முதல் முயற்சியிலேயே எவ்வித தடையுமின்றி உங்களுக்கான அவசர நிதியுதவியைப் பெறமுடியும்.