பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை விமானி கேப்டன் அபிநந்தனுக்கு இன்று ‛வீர் சக்ரா' விருது வழங்கப்பட்டது. இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த விருதை அபிநந்தனுக்கு வழங்கி கவுரவித்தார்
தமிழகத்தைச் சேர்ந்தவர் அபிநந்தன். இவர் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக செயலாற்றி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுரவி தீவிரவாத முகாம்களை தகர்த்தன. அதையடுத்து அதே ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி அன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை போர் விமானியான அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார். இத்தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்து, அபிநந்தன் உயிர் பிழைத்தார். ஆனால் பாகிஸ்தானில் அபிநந்தன் கைதுசெய்யப்பட்டார். பின்னர், இந்திய அரசும் உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார்..
இதனையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனுக்கு அவரது வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ராணுவ கமாண்டராக இருந்த அவருக்கு குழு கேப்டனாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், அபிநந்தனுக்கு ‛வீர் சக்ரா விருது' வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை முறியடிக்கும் பணீயில் தன்னுயிரை இழந்த ராணுவ வீரர்களுக்கும் ‛கீர்த்தி சக்ரா' (மரணத்திற்குப் பின்), 'சௌர்ய சக்ரா' (மரணத்திற்குப் பின்) விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.