
சமீபத்தில் யெம்மா ஏய் வசனத்தில் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் மாரிமுத்து. மாரிமுத்து என்று சொல்வதை விட ஆதி குணசேகரன் என்ற பெயராலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
சினிமாவில் இருந்து சமீபத்தில் சின்னத்திரைக்கு வந்தார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது. இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார் . மதுரை தமிழில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.
சின்னத்திரை ரசிகர்கள் எதிர்நீச்சல் தொடரை விரும்பி பார்ப்பதற்கு நடிகர் மாரிமுத்துவும் ஒரு காரணம். இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் ரஜினியின் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் நேற்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அசௌகரியம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அவரே கார் ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இவரின் சொந்த ஊரான தேனி வருசநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.