AR rahman
AR rahmanIntel

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி.. ரசிகர்களின் பணம் ரீபண்ட்!

சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சியால் ஏற்பட்ட குளறுபடியை தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்காத நபர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.

முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் டிக்கெட் எடுத்த ரசிகர்களும் ஏ.ஆர்.ரகுமானை பார்க்க முடியாமல் திணறினர்.

இந்த நெரிசலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனமும் சிக்கியது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தனது வருத்தத்தை தெரிவித்தார். திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் #wearestandwithARR என்ற ஹேஷ்டேக்களும் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இசை நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்களின் டிக்கெட் விவரங்களை மெயிலில் அனுப்பவும் என கேட்டிருந்தார்.

அதன் படி ரசிகர்களும் மெயிலில் தங்களது டிக்கெட் ரசீதை அனுப்பியிருந்தனர். இதையடுத்து, டிக்கெட் சோதனை செய்யப்பட்டு மொத்த பணமும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. மின்னஞ்சலில் சுமார் 4000 பேர் பணத்தை திருப்பிக் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இந்தநிலையில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து முதற்கட்டமாக சுமார் 400 பேருக்கு டிக்கெட் கட்டணத்தை ஆன்லைன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் திருப்பி அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com