இன்று பிறந்தநாள் காணும் ஜீவா, பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன். 2003-ல் வெளியான ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் மிகச் சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொர்ந்து பல படங்களில் நடித்தார் .
இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான ‘ராம்’ திரைப்படம் ஜீவாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியது. மனநலம் பாதிக்கப்பட்டவராக ஜீவா நடித்த கதாப்பாத்திரம் பலரின் பாராட்டை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் பெற்றுத்தந்தது. 2006 Cyprus சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. அங்கு சிறந்த நடிகருக்கான விருது ஜீவாவிற்கும், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது யுவன் சங்கர் ராஜாவுக்கும் வழங்கப்பட்டது. மேலும் இத்திரைப்படத்தில் ஜீவா மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோரது நடிப்பு பாராட்டப்பட்டது.
அதன் பிறகு 2009ல் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து காமெடியில் ஜீவா கலக்கினார். ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு’ என படம் முழுக்க வரும் டைலாக் மிகப் பிரபலம்.
திரைத்துறையில் தனக்கே உரித்தான வெகுளித்தனமான நகைச்சுவை கலந்த நடிப்பால், ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் ஜீவா.
கதைக்கு கதை வித்தியாசம், நகைச்சுவை உணர்வு, சாக்லேட் பாய் போன்ற தோற்றம் என தன்னால் முடிந்த அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக செய்து வருகிறார்.
வித்தியாசமான நடிப்பாலும், பக்கத்து வீட்டு பையனை போன்ற தோற்றத்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் ஜீவா. சினிமாவில் தொடர்ந்து நிலைத்திருக்க, காரணமாக அமைந்தது அவரது நடிப்பு மட்டும்தான்.
சிவா மனசுல சக்தி, சிங்கம் புலி, நண்பன் போன்ற படங்களில் நகைச்சுவையில் கலக்கினார் . 2012ல் கௌதம் மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன்வசந்தம்‘ படம், ஜீவாவிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
நடிகராக மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும் ஜீவா ஆர்வம் காட்டிவந்தார். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஜீவா, சிசிஎல் என்ற நடிகர்கள் கிரிக்கெட் போட்டியிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து காட்டினார்.
இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஜீவாவிற்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பன்முக தன்மை கொண்ட ஜீவா, தொடர்ந்து சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என அவரை நாமும் வாழ்த்துவோம்.