தமிழ் சினிமாவில் நடிக்கவரும் முன்னாள் டிஜிபி!

தமிழ் சினிமாவில் நடிக்கவரும் முன்னாள் டிஜிபி!
Updated on

டிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிப்பில் வெளியான, ’குட்டிப்புலி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி. இவர் தற்போது இயக்கிவரும் படம்தான், ’குலசாமி.’ இந்தப் படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக தன்யா ஹோப் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லனாக நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான ஜனனி பாலு நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை சமீபத்தில்  அந்தப் படக்குழு வெளியிட்டது. இப்படத்துக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வசனம் எழுதி இருப்பது இப்படத்தின் சிறப்பு. படத்தின் பெரும்பாலன படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்து, பட வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி ஜாங்கிட் நடித்து இருக்கிறார். இவரது கதையைத்தான் நடிகர் கார்த்தி நடிப்பில், ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 21ம் தேதி, ’குலசாமி’ திரைப்படம் திரைக்கு வருவதாக அந்தப் படக்குழு அறிவித்துள்ளது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் விமல் மற்றும் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் தியேட்டர்களில் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படம் குறித்து தனது வலைதளப் பக்கத்தில் முன்னாள் டிஜிபி ஜாங்கிட், ’’போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ள, ’குலசாமி’ படம் திரைக்கு வர உள்ளது. சிறுமிகளுக்கு நடக்கும் தொல்லைகள், அவர்களைக் காவல்துறை எப்படி காப்பாற்றுகிறது என்பதை மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் முன்னாள் டிஜிபி ஜாங்கிட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பவாரியா கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தவர் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com