சினிமாத் துறையை நேசிக்கும் மனிஷா கொய்ராலா!

பாலிவுட் பூமராங்!
சினிமாத் துறையை நேசிக்கும் மனிஷா கொய்ராலா!

நெட் ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ‘ஹீராமண்டி’  வெப் தொடர் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தின் பின்னணியில் இருக்கும் நிகழ்வுகளைக் கூறும் இத் தொடரில் மனிஷா கொய்ராலா; சோனாக் ஷி சின்ஹா, அதிதிராவ் ஹைதரி போன்ற பலர் நடித்து வருகின்றனர். முக்கியமாக, இந்தியாவில் அதிகம் அறியப்படாத பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஹீராமண்டி’ உருவாக உள்ளது.

இது குறித்து பேட்டி ஒன்றில் மனிஷா கொய்ராலா கூறியுள்ளதாவது:-

ரம்ப காலத்தில் நான் நடித்த ‘1942: A Love Story’, ‘பம்பாய்’ ஆகிய படங்கள் எனக்குத் திருப்புமுனையாக அமைந்தன. அதேபோல ‘ஹீராமண்டி’ வெப் தொடரும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திருப்புமுனையாக அமையுமென நம்புகிறேன்.

நான் என்னுடைய கரியரைத் தொடங்கும் சமயம், நாட்குறிப்பின் பக்கங்களை நிரப்புவது மிகவும் முக்கியமென எண்ணினேன். அதாவது ஒரு நடிகை அல்லது நடிகர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிஸியாக இருந்தால், அவர் வெற்றிகரமான நடிகர் ஆக வருவாரென எனக்குச் சொல்லப்பட்டது. எனவே நான் அதில் அதிக கவனம் செலுத்தி பல படங்களில் நடிக்க, அனைத்தும் தோல்வி அடைய, ஏமாந்து போனேன்.

வெற்றி என்பது என்னைப் பொறுத்தவரை, நாம் செய்ய விரும்பும் விஷயங்களை, செய்ய விரும்பும் நேரத்தில் சுதந்திரமாக செய்ய முடிவதுதான். இத்துறையின் மீதான காதல் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. நடிப்பு மற்றும் சினிமாவை நேசிப்பவள் நான்.

மோசமான படங்களில் நடிப்பதற்குப் பதில் வீட்டிலிருந்து குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது; பயணம் மேற்கொள்வது; டிரெக்கிங் செய்வது போன்ற நமக்குப் பிடித்தமான விஷயங்களில் ஈடுபடலாம்.

ஒரு நடிகையாக நாங்கள் எப்போதும் ஆண் நடிகர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பதை இயல்பாகவே எடுத்துக்கொள்கிறோம். ஆணாதிக்கம் நிறைந்த துறை இது. சஞ்சய் லீலா, பன்சாலி போன்ற ஒரு சில இயக்குனர்களின் படங்களில் மட்டுமே பெண்கள் பிரதான பாத்திரங்களாகவும், Box ஆபீஸில் பெரும் வெற்றி கொடுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.”

100 கோடி பெறுமானமுள்ள பண்ணை வீட்டு உரிமையாளர்!

யார்...?

பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் மும்பையிலுள்ள பாந்த்ரா கடற்கரையருகே உள்ள கேலக்சி அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இவ்வீட்டின் மதிப்பு 100 கோடிக்கும் மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது. தவிர, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஓய்வு எடுப்பதற்காக மும்பைக்கு வெளியேயுள்ள பன்வெல் என்கிற இடத்தில் மிகப்பெரிய பண்ணை வீடு வைத்திருக்கிறார். மும்பையிலிருந்து சுமார் 1½ மணி நேரப் பயணத்தில் இங்கே சென்றுவிடலாம்.

யார் இவர்...?

இயற்கையோடு இணைந்த இந்தப் பண்ணை வீடு மொத்தம் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த நடிகருக்கு நெருக்கமான பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் ஓய்வு எடுக்க விரும்பும் நடிகைகள் இங்கே வருவதுண்டு.

இதனுள் 3 ஆடம்பரமான பங்களாக்கல் இருப்பதோடு அருமையான நீச்சல் குளமும் இருக்கிறது. இங்கிருக்கும் தொழிலாளர்கள் இயற்கை முறை விவசாயம் செய்கின்றனர்.

நடிகருக்கு குதிரை சவாரி மிகவும் பிடித்தமானது என்பதால் குதிரை சவாரி தளம் மற்றும் 5 உயர் ரக குதிரைகள் உள்ளன. பண்ணை வீட்டில் தங்கியிருக்கையில், குதிரை சவாரி செய்வது, குதிரைகளுக்கு உணவளிப்பது, அவைகளிருக்குமிடத்தை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை ஆர்வத்துடன் செய்கிறார்.

மேலும், நவீன ஜிம் ஒன்றும் இவ்வீட்டினுள் இருக்கிறது. கொரோனா முடக்கக் காலத்தில் இந்தப் பண்ணை வீட்டினுள் இருந்ததோடு, விவசாயமும் செய்துள்ளார். இதைச் சுற்றிப் பார்க்க சிறப்பு வாகனமும் வைக்கப் பட்டுள்ளது.

தனது சகோதரி பெயரில் “அர்பிதா ஃபார்ம்ஸ்” என்கிற பெயரில் பண்ணை வீட்டை வைத்திருக்கும் இப்பிரபலம், ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவது இங்கேதான். இதன் விலையும், மதிப்பும் இப்போது 100 கோடிவரை ஆகிவிட்டது என தரகர்கள் கூறுகின்றனர். (யார் இந்த பிரபலம்?)

பண்ணை வீட்டில் ராஜாவைப் போல் வளைய வரும் இவர், இருதய நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் தனது தொண்டு நிறுவனம் வழியே நிதியுதவி அளித்து வருகிறார். குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்ட, பல கோடிகள் பெறுமானமுள்ள வீடு, பண்ணை வீடு என வைத்திருக்கும் இந்தப் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com