திரைப்படமாக உருவாகும் நாங்குநேரி சம்பவம்!
திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் மற்றும் அவரின் தங்கை ஆகியோர் சக பள்ளி மாணவர்களால் கடும் ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டனர். தீண்டாமை கொடுமை காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்ததை அடுத்து நாங்குநேரி சம்பவம் மாநிலம் முழுவதும் விவாதப்பொருளானது.
இந்நிலையில் இச்சம்பவத்தை மையப்படுத்தி திரைப்படம் எடுக்க இருப்பதாக கால் டாக்ஸி படத்தின் இயக்குநர் பா.பாண்டியன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சின்னதுரை என்ற பள்ளி மாணவன் தன்னுடன் படிக்கும் சக நண்பர்களால் வீட்டு வாசலில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டார். மேலும் இதில் அவரது தங்கையும் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் முடிவில் அளிக்கப்படும் தகவலை வைத்து தமிழ்நாடு அரசு கல்வி நிலையங்களில் தீண்டாமைக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செயல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கால் டாக்ஸி என்ற திரைப்படத்தின் மூலம் கால் டாக்ஸி டிரைவர்களினுடைய வாழ்க்கையை படமாக்கிய பா.பாண்டியன் தற்போது நாங்குநேரி சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை கால் டாக்ஸி படத்தை தயாரித்த கே.டி. காம்பென்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேசமயம் நாங்குநேரி சம்பவம் சம்பவத்திற்கு தவறான திரைப்படங்களே காரணம் என்று பல திரைத்துறை பிரபலங்களே கூறியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் நாங்குநேரி சம்பவம் திரைப்படமாக உள்ளது. இந்த படத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குரல் எந்த அளவுக்கு பதிவு செய்யப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.